நாடாளுமன்றத் தேர்தல்:-உள்நோக்கத்துடன் சில சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது! ஆட்சியர் - எஸ்பிகள் மாநாட்டில் முதலமைச்சர் எச்சரிக்கை!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாநாடு நடந்தது.
தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டு நாட்கள் நடந்த இதில் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் துவக்க உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் நமது அரசு பொறுப்பேற்று நடைபெறக்கூடிய இந்த இரண்டாவது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநாட்டில், உங்கள் அனைவரையும் ஒருசேர சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று மாவட்ட ஆட்சியர்கள். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடந்தது. 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட போதும் ஆட்சியர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களை நான் சந்தித்து இருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை நான் சந்தித்து வருகிறேன். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற் கொள்ள இருக்கிறோம்.
இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த அமர்வில் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு!
இரண்டாவது. பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடமளித்து விடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்! இது நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதனை குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும்.
பட்டியலின / பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும். அதனைக் சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியேரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.
தற்போதைய கால கட்டத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களும். காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மாநாட்டின் நிறைவு விழா உரையின் போது அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1400 உயரத்தி வழங்கப்படும் என்றும் அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1100 ரூபாயில் இருந்து 1500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
உணவு உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதன் மூலம் 1லட்சத்து 71 ஆயிரத்து 884 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும் இதனால் அரசுக்கு 68.77 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இதை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்றே அரசு கருதுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் எஸ்சி , எஸ்டி, பிற்படுத்தப்படட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை சீரமைக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுபவர்களுக்கான உதவித் தொகையும் 50000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தும் முறையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்த குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.