ஜெயலலிதாவும்... லீலாவதியும்! இரங்கல் குறிப்பும்!

ஜெயலலிதாவும்... லீலாவதியும்! இரங்கல் குறிப்பும்!

  ம.பா.கெஜராஜ்,

  தமிழர் மனங்களில் நீங்கா இடம் பெற்றவரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என அன்போடு அழைக்கப்பட்டவருமான எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு அவரது அண்ணன் மகள் லீலாவதி அவரது சிறுநீரகத்தை அளித்தார். அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

  பலர் நேரில் சென்று லீலாவதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், அ.தி.மு.க. ஒருங்கினைப்பாளார் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோரிடமிருந்து இரங்கல் குறிப்பு வெளியானது.

 இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பரகத் அலி அவர்கள் ஒரு செய்தியை நினைவுப்படுத்தியுள்ளார்.

 அதுபற்றின விவரம் வருமாறு, 

  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என அதிமுக இரண்டாக உடைந்தது. பிளவுபட்ட ஜெயலலிதா அணியே இன்னொரு பிளவை சந்தித்தது. அது நால்வர் அணி என்ற பெயரில் உதயமானது.

 அந்த அணியிலிருந்த திருநாவுக்கரசர் ஜெயலலிதாவுக்கு எதிராக முழங்கினார். எல்லாமே சில நாட்கள்தான். 1988 நவம்பர் 16-ம் தேதி கட்சி அலுவலகத்தில்   எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் அளித்த லீலாவதியுடன் போய், ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார் திருநா.

 அதே நேரத்தில், லீலாவதிக்கு அங்கே மரியாதை கிடைக்கவில்லை. ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அவர் வந்துவிடக் கூடாது என முட்டுக்கட்டை போடப்பட்டது. அப்போது முதல் ஜெயலலிதாவுக்கும் லீலாவதிக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

 2006 சட்டசபைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அவரை எதிர்த்துப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்ற லீலாவதி தடுக்கப்பட்டார். ''அதிமுகவைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்திருந்தார்கள்.

  வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் முடிந்த பிறகுதான் விடுவித்தனர்'' இது பற்றி ஜனாதிபதி வரையில் புகார் அளித்தார் லீலாவதி. ஆனால், அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தால் எந்த நடவடிக்கையும் இல்லை.

  ''ஆண்டிபட்டியில் போட்டியிட விடாமல் தடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனச் சொல்லி எம்.ஜி.ஆர் சமாதியில் திடீரென லீலாவதி உண்ணாவிரதம் இருந்தார்.

  அதன்பின் ஆண்டிப்பட்டிக்குச் சென்று ஜெயலலிதாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய முயன்ற போது அவரை மதுரையில் தடுத்து நிறுத்தினார்கள்.

''ஜெயலலிதாவை எதிர்த்து பிரசாரம் செய்ய வந்தேன். என்றூ சொன்னவரை 'ஆண்டிப்பட்டிக்குப் போகக் கூடாது, பேசாமல் ஊருக்குத் திரும்பிப் போய் விடுங்கள்' என்று அதிமுகவினர் தொலைப்பேசியில் மிரட்டுகிறார்கள்.

  அந்த அம்மாவைப் பற்றிய பல தகவல்களைச் சொல்லாமல் ஓயமாட்டேன். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் அந்த அம்மாவுக்கு சித்தப்பா எம்.ஜி.ஆரின் நினைவு வரும்'' என்று பேட்டி அளித்தார் லீலாவதி.

 இப்படித்தான் இருந்தனர் ஜெயலலிதாவும்... லீலாவதியும்!

   ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் லீலாவதிக்கு இரங்கல் குறிப்பு வந்திருக்குமா?