அன்வர் ராஜாவை அ.தி.மு.க. நீக்க இதுதான் காரணம்!

அன்வர் ராஜாவை அ.தி.மு.க. நீக்க இதுதான் காரணம்!

   ம.பா.கெஜராஜ்,

 முன்னாள் அமைச்சரும்,அ.தி.மு.க.சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலாளருமான அன்வர் ராஜா அக்கட்சியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார்.

 அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்                       பழனிச்சாமி ஆகியோர் இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிடிருக்கிறார்கள்.

 அவ்வாற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது அ.அன்வர்ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

 ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியில் இருந்தவர். கடந்த 2001- 2006 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர்.

 பின்னர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றவர்.

 எப்போதுமே சசிகலாவின் ஆதரவாளராக இருந்த அன்வர் ராஜா,சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு, வேறு வழியின்றி எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்துவந்தார்.

 பின்னர் வி.கே.சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக  பல கருத்துக்களைத் தெரிவித்ததோடு, பா.ஜ.கவுடனான கூட்டணியே அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக பேசி வந்தார்.

 இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது ஒருபக்கம் இருக்க, அன்வர் ராஜா மீது பா.ஜ.க. கடும் கோபம் கொண்டது.

 இந்நிலையில் எடப்பாடி கே. பழனிச்சாமியை அன்வர் ராஜா கடுமையாக விமர்சிப்பது போல ஆடியோ ஒன்று வெளியானது.

 அப்படியிருக்க கடந்த நவம்பர் 24ஆம் தேதி அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, தற்போதைய தலைமை வலிமையற்றதாக இருப்பதாகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காக சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் எனக் கூறியதாகவும், அதற்கு மேலும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அன்வர் ராஜாவை ஒருமையில் குறிப்பிட்டு, "சசிகலாவின் ஜால்ராக்களையெல்லாம் ஏன் பேச விடுறீங்க?" என்று குரல் எழுப்பியதாக  தகவல்கள் வெளியானது.

 இதற்கு பின்னர் தான் அன்வர் ராஜாவை நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இந்த நீக்கம் தொடர்பான அ.தி.மு.க.வின் அறிக்கை வெளியான நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் பல அன்வர் ராஜாவை நீக்கியதன் பின்னணியில் பா.ஜ.க.இருப்பதாகவும், அதன் காரணமாகவே இஸ்லாமியர்களை அ.தி.மு.க.கழற்றிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.

 குறிப்பாக தமிழ்நாடு சுன்னத் ஜமா அத் அமைப்பின் மாநில பொருளாளர் எஸ்.சையத்கவுஸ் அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

 குறிப்பாக அ.தி.மு.க வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பா.ஜ.கவில் சமீபத்தில் இணைந்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அன்வர் ராஜா நீக்கப்பட்டிருப்பதே இதற்கு சான்று என்று சொன்னார்.

 இந்நிலையில் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து அக்கட்சி அறிவிப்பை வெள்ளியிட்டுள்ளது.