ஜி.சாந்தகுமார்,
தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா தங்களை அழைக்காதது வருத்தம்தான் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு'வின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம், கடந்த 2 நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளுடனும், மாவட்ட வாரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.
கூட்டத்தின் முடிவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக 88 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்திருக்கிறோம்.
அதன் அடிப்படையில், அடுத்த 15 நாட்களில் மீண்டும் 38 வருவாய் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டு நிலையான முடிவை அறிவிப்போம்.
இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது. அதை மக்களவை தேர்தல் வரை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உண்மையில் எங்களை அழைக்காதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது, சாதாரண தொண்டர்களும் கட்சியின் பொதுச் செயலாளராக வரும் உரிமையை, வாய்ப்பை தொண்டர்களுக்கு வழங்கினார். தொண்டர்களுக்கான இயக்கம், பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது.
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் 9 கட்சிகள் உள்ளன. யார் தலைமையில் கூட்டணி என்று அனைத்து கட்சிகளும் கூடி முடிவெடுப்போம். தனிப்பட்ட முறையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், பழனிச்சாமியை தவிர்த்து அனைத்து தலைவர்களும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நடிகர் விஜய் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தபோதே, அதை நான் வரவேற்றேன். அவரது இலக்கு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அவரது அரசியல் ரீதியான செயல்பாடுகளை பார்க்கும்போது தான் தெரியவரும். இன்றுவரை அவர் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்.
அதிமுகவில் எம்ஜிஆர், எந்த சட்டவிதியை திருத்தம் செய்யவும், ரத்து செய்யவும் கூடாது என்று வரையறுத்து எழுதினாரோ அதற்கெல்லாம் பங்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாதான் நிரந்தர பொது செயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவை எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது. அதை மீட்கதான் உச்சநீதிமன்ற வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறோம்.
இதுதொடர்பான 6 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் சூட்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் தீர்ப்பு இறுதியானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. என்று சொன்னார்.
அப்போது, திமுகவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், "எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றி பெற முடியாது. இது பொதுமக்கள், கட்சிக்காரர்கள் ஆகியோரின் எண்ணம்" என்று சொன்னார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.