மயிரிழையில் உயிர் தப்பிய மம்தா பானர்ஜி! இன்னுமா கண்டுபிடிக்கலை?
ஆ.ராஜேஷ்குமார்,
தீதி என்ற பெயருக்கு சொந்தக்காரர் தான் மம்தா பானர்ஜி.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தார். அப்போது சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதனையடுத்து, தனி விமானத்தில் கொல்கத்தாவிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மற்றொரு விமானம் மோதுவது போல் வந்தது.
விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து, கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துக்கு மேற்குவங்க அரசு கடிதம் எழுதியது.
அதில், விமானம் சென்ற பாதையில் மற்றொரு விமானம் வந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தான் பயணம் செய்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எதிரே மற்றொரு விமானம் நேருக்கு நேராக திடீரென வந்ததாகவும், 10 வினாடிகள் அந்த விமானம் இதே போல் பறந்து இருந்தால் தான் பயணம் செய்த விமானமும் எதிரே வந்த விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றார்.
விமானியின் திறமையால் நான் உயிர்பிழைத்தேன். விமானம் 6000 அடி கீழே இறங்கியது. நான் லேசான காயம் அடைந்தேன். எனக்கு இன்னும் வலி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏடிசி மற்றும் டிஜிசிஏவிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றார்.
இது சதி என்றே தீதி ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.