ராஜீவ் கொலையாளி பேரறிவாளனுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன்! போலிசார் மகிழ்ச்சி!!

ராஜீவ் கொலையாளி பேரறிவாளனுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன்! போலிசார் மகிழ்ச்சி!!

  ம.பா.கெஜராஜ்,

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கிடைக்கப்பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது  தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

   இவர்களில் நளினி இரண்டு முறையும், பேரறிவாளன் மூன்று முறையும் பரேலில் வெளிவந்தனர். பேரறிவாளன் தற்போதும் பரேலில் தான் உள்ளார்.

   இந்நிலையில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கு  மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

   இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

   இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  பரோலின் போது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

   பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு ஜாமின்  வழங்கி உத்தரவிட்டது.   

  ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை 2014ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே அவர் ஒரு சலுகையை அனுபவித்துவிட்டார் எனச் சுட்டிக்காட்டினார்.

 மேலும் இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை விவாதிக்கும்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

  அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், "பேரறிவாளன் இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்" என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

"302வது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்" என தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

 பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "302 வது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்" என்பதை சுட்டிக்காட்டினார்.

 பேரறிவாளன், பரோல் மற்றும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

 மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

 இந்த வாதங்களுக்கு பின்னரே பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி நிதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்பு:-மூன்று முறை பரோலில் வெளிவந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டை வீட்டில் இருந்த போது அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆண் பெண் போலிசார் 24 மணிநேரமும் பணியில் இருந்தனர்.

  அப்போதெல்லாம் பேரறிவாளன் வீட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட போலிசாருக்கு வழங்குவதில்லை என்றும், பெண் போலிசார் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட அவர்கள் இடமளிக்காமல் நொடித்து தள்ளியிருக்கிறார்கள்.

 தற்போது ஜாமின் கிடைக்கெப்பெற்ற நிலையில் இந்த பிரச்சனைக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கப்படும் என்று போலிசார் மகிழ்கின்றனர்.