எடப்பாடியை நெருங்கும் கொடநாடு மேட்டர்!

எடப்பாடியை நெருங்கும் கொடநாடு மேட்டர்!

  ம.பா.கெஜராஜ்,

 கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபால் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம், எடப்பாடி பழனிச்சாமியை குறிவைத்தே நடத்தப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 கடந்த 2017, ஏப்ரல் 23ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது .

  அப்போது நடந்த மோதலில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் சொந்த நாடான நேபாளத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக, சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

 தொடர்ந்து, கொள்ளை வழக்கில் தொடர்புடையவராகக் கூறப்பட்ட சயான், கேரளாவில் விபத்து ஒன்றை எதிர்கொண்டார். இந்தச் சம்பவத்தில் சயானின் மனைவியும் மகளும் இறந்தனர். அடுத்தடுத்து நடந்த மரணங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

 ''எனது சகோதரரின் மரணத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்'' என கனகராஜின் அண்ணன் தனபால் குற்றம் சுமத்தி வந்தார். ஒருகட்டத்தில் 2019ஆம் ஆண்டு சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு அளித்த பேட்டியும் எடப்பாடியை நோக்கியே நகர்ந்தது.

  தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கோடநாடு வழக்கில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் 3 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கனகராஜின் அண்ணன் தனபாலிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

   இதனால் எடப்பாடி தரப்பு அலறியடித்தனர்.

  தற்போது ஊட்டி நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார், இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக இருக்கும் சயான், ஜம்சீர் அலி, சந்தோஷ் சாமி, மனேஷ் சாமி, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணையை நடத்தினர்.

   தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், நண்பர்கள் என நாற்பதுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

  இந்நிலையில் சாட்சிகளை அழித்தல், தடயங்களை மறைத்த ஆகிய பிரிவுகளின்கீழ் கனகராஜின் அண்ணன் தனபால், அவர்களது உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  இவர்கள் இருவரையும் வரும் நவம்பர் 8ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்ஜை பாபா உத்தரவிட்டார்.

  இதையடுத்து, இருவரும் கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்`` இந்த வழக்கில் அவர்களை பிணையில் விடுவதிலும் சிக்கல் இல்லை. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி முற்றுவதாகவே பார்க்க முடிகிறது. ஒரு விபத்தை மறு விசாரணை செய்கிறார்கள். அதனை கொலை என எடுத்துக் கொண்டால், அதற்கான தடயங்களை யார் சொல்லி மறைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

  கனகராஜின் அண்ணன், தொடக்கத்தில் இருந்தே எடப்பாடி மீது குற்றம் சுமத்தி வருகிறார்.

   அப்படியிருக்கும்போது, இவர்கள் தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

   எடப்பாடியோடு நெருக்கம் இருந்திருந்தால் தனபால் அமைதியாக ஒதுங்கியிருப்பார். வழக்கமாக, இதுபோன்ற முறைகளைக் கையாண்டுதான் போலீஸாரால் உண்மைகளை வரவழைக்க முடியும். அவர்கள் ஜாமீன் போடுவதை வைத்து அடுத்தகட்டத்தை முடிவு செய்யலாம்" என்று சொன்னார்.