கஞ்சாவை மையப்படுத்தி காட்பாடியில் கொலை! வீடியோ எடுத்து குடும்பத்தாருக்கு அனுப்பிய கும்பல்!

கஞ்சாவை மையப்படுத்தி காட்பாடியில் கொலை! வீடியோ எடுத்து குடும்பத்தாருக்கு அனுப்பிய கும்பல்!

 ஜி.கே.சேகரன்,  

 கொலை செய்து வீடியோ போட்டோ எடுத்து குடும்பத்தாருக்கு அனுப்பிய கும்பல். இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து இரண்டு பேரை பிடித்து காவல் துறை விசாரணை. கஞ்சா போதையில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

   வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் - பாரதி தம்பதியினர். இவர்களது மகன் வெங்கடேசன் (வயது 22) பாலிடெக்னிக் படித்து வேலை தேடிவரும் இவர் கடந்த 9 -ம் தேதி மாலை வேலை தேடி செல்வதாக தாய் பாரதியிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

   இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெங்கடேசன் தம்பி மணிகண்டனின்  வாட்ஸ் அப்புக்கு ஒரு படம் வந்துள்ளது.

   தில் வேலை தேடி சென்ற வெங்கடேசன் வெட்டுப்பட்டு ரத்தகாயத்துடன் இருப்பது போல் இருந்துள்ளது.

  இது குறித்து அவர் வெங்கடேசனின் நண்பர் நிர்மலிடம் கேட்டுள்ளார். வெங்கடேசனை யாரோ கூட்டி சென்று அடித்துப் போட்டு விட்டதாகவும், அதனை நான் கூறினால் என்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் என நிர்மல் தெரிவித்துள்ளார்.

   இச்சம்பவம் குறித்து  காட்பாடி காவல் நிலையத்தில் வெங்கடேசனின் தாயார் பாரதி நேற்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

  காட்பாடி போலிசார் கசம் பகுதிக்கு சென்று அங்கு வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

  இது குறித்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் முன்னிலையில வெங்கடேஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

  பின்னர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த கொலை சம்பவம் குறித்து காட்பாடி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சந்தேகத்தின் பேரில் பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த திவாகர், சதீஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

   அதில்,வெங்கடேசனை வெட்டி கொலை செய்த செங்குட்டை அருகேயுள்ள காலி இடத்தில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

   மேலும், கொலையாளிகள் குறித்த விசாரணையில் கரிகிரி சூர்யா, கரிகிரி மணி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது.

   இதில், கரிகிரி சூர்யா மீது திருவலம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  காட்பாடியைப் பொறுத்தவரை அங்கு பழனி என்பவர் சப்டிவிஷன் அதிகாரியாக பதவி ஏற்றப்பின்னர் குற்றங்கள் அதிகமாக நடக்கிறதாம்.

  சமீபத்தில்கூட ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி தாக்கிய கும்பல் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகை, பைக் ஆகியவற்றையும் மீட்கவில்லை. பாதிக்கப்பட்டவர் சுமார் 7 நாட்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ளார். எனினும் வழக்கு ஏதும் பதியவில்லை.

அடிக்கடி உள்ளூர் அமைச்சர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுபடுத்திவைத்தால் நலம்.