அதிமுக காரரின் கனிமவள கொள்ளையால் நெடுஞ்சாலையில் மறியல்!

அதிமுக காரரின் கனிமவள கொள்ளையால் நெடுஞ்சாலையில் மறியல்!

  ஜி.கே.சேகரன்,

  தெருவில் கொட்டப்பட்ட சாக்கடை கழிவுகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் தொடர்ந்து பாதித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

   வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு, ரங்காபுரம் மாதா கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சாலையில் உள்ள சாக்கடை கழிவுகளை எல்லாம் அள்ளி தெருவில் கொட்டியதால், வீடுகளின் மீது சாக்கடை கழிவு அடித்ததோடு காலையில் பள்ளி சென்ற குழந்தைகள் 3 பேர் வழுக்கி விழுந்துள்ளனர். மேலும் இப்பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்காததால் குண்டும் குழியுமாக இருக்கிற்றது.

   செங்காநத்தம்  மழையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லி ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை நாள் ஒன்றுக்கு இத்தெரு வழியாக செல்வதால் ஏற்படும் புழுதியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், நிம்மதியாக உண்ண உறங்க முடியவில்லை என்றும்,  இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததை கண்டித்து மாதா கோவில் தெருவை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மறியல் செய்தனர்.

  அவர்கள் நாயக்கனேரி, செங்கல்நத்தம் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாரிகள் வராததால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு வேலூர் காவல்துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் கைவிடப்பட்டது. 

  மேலும் சம்பவ இடத்தில் வேலூர் கோட்டாட்சியர் பூங்கொடி, வேலூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவியாளர் பிரபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அதிமுக புள்ளி ஒருவர் தான் காரணமாம்.