செக்ஸ் மேட்டரில் சிக்கிய எஸ்.பி. ஊழல் வழக்கிலும் மாட்டிக் கொண்டார்!

செக்ஸ் மேட்டரில் சிக்கிய எஸ்.பி. ஊழல் வழக்கிலும் மாட்டிக் கொண்டார்!

ஆ.பாலஜோதி,

  தமக்கு கீழ் பணிபுரிந்த சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு காவல் படை கமாண்டன்ட் செந்தில்குமார், வருமானத்திற்கு அதிகமாக, 1.28 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பதாகலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  விருதுநகர் மாவட்டம், ரெட்டியார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழக காவல் துறையில் எஸ்.பி., யாக பணிபுரிந்து வருகிறார்.

   கோவை புதூர் பகுதியில், மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். கடந்த, 2023ல் இருந்து, அதே பகுதியில் உள்ள, சிறப்பு காவல் படையின் நான்காவது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது தனக்கு கீழ் பணிபுரியும் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

     இந்நிலையில், செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இவ்வழக்கு தொடர்பாக, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

   லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியதாவது: செந்தில்குமார் மனைவி, பள்ளிக்கல்வி வரை படித்துள்ளார். அவருக்கு சொந்தமாக வருமானம் இல்லை. ரெட்டியார்பட்டியில் ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. செந்தில்குமாருக்கும், சட்டப்பூர்வமான முக்கிய வருமானம், அவரது அரசு ஊதியம் மட்டுமே.

   அவர் மீதான குற்றச்சாட்டு அடிப்படையில், 2022, அக்., 1ல் இருந்து, 2025, அக்., 31 வரையிலான, செந்தில்குமாரின் வருமானம், அவரின் குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, வீட்டுக்கடன் திரும்பி செலுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

   அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக, 1.28 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது என்று சொன்னார்கள்.