சென்னையில் தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை! அரசியல் கட்சிகள் வசூலில் இறங்கலாம்!

ம.பா.கெஜராஜ்,
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்ய மத்திய நிதியமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை உள்ளிட்ட பணப் பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மையை பின்பற்றுவதற்காக, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வாயிலாக தேர்தல் நிதி பத்திரங்களை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அப்படியிருக்க மத்திய நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இன்று முதல், வரும் 10ம் தேதி வரை 19வது கட்ட தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
அந்த வகையில், சென்னை, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, டில்லி, காந்திநகர், சண்டிகர், போபால், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி ஆகிய நகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளைகளில் தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
இதே மாதிரி கடந்த 2018ல் மார்ச் 1 - 10ம் தேதி வரை 18ம் கட்ட தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.