பா.ஜ.க. வை பற்றுகிறதா திமுக!

ஜார்ஜ்.ரவி,
சர்வதே ச செஸ் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்திருந்த பாரத பிரதமர் மோடியிடம் மிகவும் அனுசரனையாக நடந்துக் கொண்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதை சிலர் விமர்சனம் செய்தனர்.
இதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்கிற மாதிரியான பேச்சை முதல்வர் வெளிப்படுத்தினார். அதாவது சர்வதேச அளவிளான செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்த அனுமதித்த பிரதமர் இதை போல இன்னும் நிறைய வாய்புகளை அளிக்க வேண்டும் என்று நிறைவு விழாவில் பேசினார்.
அதற்கும் கூட திமுக பாஜக பக்கம் சாய்கிறது என்று சொன்னார்கள்.
இந்நிலையில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் முதல்வர். அந்த பயணத்துக்கு முந்தைய நாள் திருமாவளவனின் பிறந்த நாள்விழாவில் கலந்துக் கொண்டு முதல்வர் பேசுகையில் நான் டெல்லிக்கு காவடி தூக்க செல்லவில்லை என்றும், அவரது பேச்சுக்கு இடையே பல இடங்களில் ஒன்றிய அரசு என்றும் குறிப்பிட்டார்.
அப்படியிருக்க ஒருநாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார்.
முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, நினைவு பரிசையும் வழங்கி கவுரவித்தார். மரியாதை நிமிர்த்தமான இந்த சந்திப்பு சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது.
பின்னர், 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை சந்தித்த முதலமைச்சர், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதோடு, நீட் விலக்கு மசோதவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் அவருக்கு தமிழகத்தின் பாரம்பரிய சிறுதானியங்களை பரிசாக வழங்கினார். மேலும், அவருடன் 20 நிமிடங்கள் பேசிய ஸ்டாலின் முதலில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு நன்றி தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் பற்றிய புத்தக தொகுப்பு ஒன்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் நீட் விலக்கு மசோதா ஒப்புதல், ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் சொல்கிறது.
முதலமைச்சர் வழங்கிய பரிசு பெட்டியில், பாரம்பரிய தானிய வகைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கம்பு, வரகு, தினை, சாமை, சீரக சம்பா, குள்ளக்கார், கேழ்வரகு என ஒன்பது வகையான சிறுதானியங்கள் மற்றும் நெல் வகைகள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் பிரதமரும் முதல்வரும் கலகலவென சிரித்தபடி இருப்பதால் திமுக, பா.ஜ.க. வுடன் நெருங்கி உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லிவருகின்றனர்.
ஆனால் மத்தியில் இணக்கமாக இருந்தால் மாநில மக்கள் நல பணி திட்டங்களை சுலபமாக பெறலாம் என்பது தானே யதார்த்தம்.