மக்களிடம் சிக்கிய ரேஷன்கடை ஊழியர்கள்! பொங்கல் பெட்டகத்தில் ஓட்டையாமே?

மக்களிடம் சிக்கிய ரேஷன்கடை ஊழியர்கள்! பொங்கல் பெட்டகத்தில் ஓட்டையாமே?

ம.தமிழ்,

   பொங்கல் பரிசு என்கிற பெயரில் தரமற்ற தொகுப்பை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. அதை பொதுமக்களிடம் வழங்க முடியாமல் திணறி வருகிறோம் என்று ரேஷன் கடை பணியாளர்கள் சிலர் வருத்தப்பட்டு சொல்கிறார்கள்.

   கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு தொகுப்புகளையும், ரூ. 2 ஆயிரத்து 500 பணமும் கொடுத்து  பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க வைத்தனர்.

 இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 21 வகையான பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.

  இவற்றை வீடுகளுக்கு டோக்கன் மூலம் வழங்கப்பட்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

  அப்படியிருக்க, கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர் உள்ளிட்ட ஏழு வட்டங்களுக்குட்பட்ட நியாயவிலைக்கடைகளில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த நியாயவிலைக்கடைகளில் வந்து இறங்கும் பொங்கல் தொகுப்புகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

  காய்ந்த கரும்பு, பரிசுத் தொகுப்பில் 18க்கு தொகுப்பிற்கு பதில் 16 மட்டுமே இருப்பதாகவும், அதிலும் வெல்லம் பாதி உருகி இருப்பதாகவும், இதை மக்களிடம் கொடுத்தால் வேறு வெல்லம் கொடுங்கள் என்று நியாயவிலைக்கடை ஊழியர்களிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஊழியர்கள் வருத்தப்படுகின்றனர்.

 மேலும், பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்படும் அத்தனை பொருட்களும், ஏற்கனவே பேக் செய்யப்பட்டு, அவைகள் பாக்கெட்டுகளாக வருவதினால் அந்த பாக்கெட்டுகள் பல உடைந்து நொறுங்கியுள்ளது.

   உதாரணத்திற்கு மிளகு மூட்டைகளில் பாக்கெட்டுகள் போடப்பட்டு வருவதில் தன்மையற்ற மிளகுகளாகவும், அதில் ஒரு சில பாக்கெட்டுகள் உடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

  அதேபோல, பருப்பு வகைகளும் சிதைந்துள்ளன.

 மேலும் நெய் 100 கிராம் கொண்ட தொகுப்புகள் ஒரு பெட்டிக்கு 100 டப்பாக்கள் ஆவின் நெய் தரப்பட்ட நிலையில், ஒரு சில டப்பாக்கள் அதிலும் 96 முதல் 98 வரை தான் எண்ணிக்கையில் உள்ளன.

  இது குறித்து மேல்மட்ட அளவில் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

 மக்களை நேரடியாக சந்திக்கும் நாங்கள் தான் அவர்களுக்கு பதில் சொல்லி சமாளித்து அனுப்புகிறோம் என்கிறார்கள் மேற்படி ரேஷன் கடை ஊழியர்கள்.