துரை வைகோ சின்னப்பையன் அவருக்கு போய்:- மதிமுகவை திமுகவுடன் இணைக்கலாம் வைகோவின் நண்பர் காட்டம்!

துரை வைகோ சின்னப்பையன் அவருக்கு போய்:- மதிமுகவை திமுகவுடன் இணைக்கலாம் வைகோவின் நண்பர் காட்டம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 மதிமுக பொதுச்செயளலார் வைகோவுக்கு, அக்கட்சியைச் சேர்ந்த அவைத்தலைரான திருப்பூர் துரைசாமி, கடிதம் எழுதி உள்ளார். அதில் மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாகவும், பேசாமல் கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் விவரம்,

 மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார்.அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.

  மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது.

   தாங்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலை குறித்து விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன். அதற்கு இன்று வரை தங்களால் பதிலேதும் சொல்ல இயலவில்லையா? லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த தி.மு.க.வில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.விற்கே சென்றுவிட்டனர். தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் ம.தி.மு.க.விற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கழக தோழர்கள், தமிழகம் முழுவதும் பழைய கழக உறுப்பினர்களே தங்களை புதுப்பித்து கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதில் கழக தோழர்களிடம் தொய்வும், ஆர்வமும் குறைந்து உள்ளதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பட்ட சிரமங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை ம.தி.மு.க.விற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

 இவ்வாறு திருப்பூர் துரைசாமி கூறி உள்ளார். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியின் இந்த கடிதம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடிதத்துக்கான காரணம் என்ன?

 ம.தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் துரை வைகோ ஆதரவாளர்களை வெற்றி பெற செய்ய வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

 இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள மனக்கசப்பும் அதிருப்தியும் வைகோவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் தான் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியை தி.மு.க.வுடன் இணைந்து விடலாம் என்று கடிதம் எழுதி உள்ளார்.

 துரை வைகோ பதில்,

  திருப்பூர் துரைசாமியின் கடிதத்துக்கு துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதற்கிடையில் திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

   அப்போது அவர் துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம். அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.