மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி ஆச்சா?இல்லையா?? வரும் ஆனா வராது!

க.பாலகுரு,

  தமிழக அரசு கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில் கடனை தள்ளுபடி செய்யாமல் அபராத வட்டியுடன் கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்க நிர்வாகம் தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க குவிந்தனர்.

 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் நன்னிலம் அருகே திருவீழிமிழலை பகுதியை சேர்ந்த 24 மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் ஏறாளமானோர் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.

நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றுள்ளோம்.

 இந்த கடனை கடந்த 2021 ஆண்டு செலுத்திய போது, எங்களது கடன் தள்ளுபடி செய்யப்பட்டுளதாக கூறி வங்கி நிர்வாகம் கடன்தொகையை சேமிப்பு கணக்கில் வரவு வைத்தது.

  2 ஆண்டுகள் கழித்து தற்போது கடன் தள்ளுபடி கிடையாது எனவும், திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் கடன் தொகையை இரு மடங்காகி உள்ளது. மேலும் எங்கள் சேமிப்பு கணக்கையும் முடக்கி வைத்துள்ளனர். இதனால் பல்வேறு வகையிலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு அரசு அறிவித்தப்படி கடன் தள்ளுபடி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.