நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை:- சம்பளத்தை பிடிப்பதாக நீதிபதிகள் உத்தரவு!

ம.பா.கெஜராஜ்,
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை, அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னை வேளச்சேரி, தரமணி, உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும். இது குறித்து கடந்த மார்ச் 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்கள்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை. இதுபோன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை.
எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன், கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது.
அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாட்களுக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.