தேவாலயங்களுக்கு 3 லட்சம் வரை நிதியுதவி!ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு!

தேவாலயங்களுக்கு 3 லட்சம் வரை நிதியுதவி!ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

 வெளிநாட்டு உதவிகள் பெறாதாதேவாலாய கட்டிட பழுதுகளை சீரமைக்க ரூ.3 லட்சங்கள் வரை வழங்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள்  அறிவித்துள்ளார்.

 இது குறித்து வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி வெளியீடு செய்திருக்கிறார், அதில் கூறப்பட்டிருப்பதாவது.

   தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

            இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். மேலும் எந்தவொரு வெளிநாடுகளிலிருந்தும் இத்தேவாலயங்களுக்கு நிதியுதவி பெற்றிருத்தல் கூடாது.  சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.

  தகுதியின் அடிப்படையில் முன்மொழிவுகள் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.  மாவட்டத்தில் உள்ள மறைமலை / கத்தோலிக்க போதகரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவாலயங்கள் பழுதுப்பட்டிருப்பின் அதற்கான பழுதுபார்ப்பு / சீரமைப்பு பணிகளுக்காக தேவாலயங்களின் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 இலட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 இலட்சமும், 20 வருடத்திற்கு மேலிருப்பின் ரூ.3 இலட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

 இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  விண்ணப்பப் படிவத்துடன் பிற்சேர்க்கை II மற்றும் III-ஐ பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்தவ தேவாலயங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும்.  நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

                        எனவே, வேலூர் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள கிறித்தவ தேவாலயங்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரம் முதல் தளத்தில் உள்ள வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள் கேட்டுக்கொள்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.