போக்சோ வழக்கில் அதிரடி விடுதலை! 17 ஆண்டு சிறை தண்டனை ரத்து:- சென்னை உயர் நீதிமன்றம்!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தைப் பொருத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தண்டனை அடைந்தவர்கள், தண்டணை காலத்துக்குள் விடுதலைப் பெறுவது மிகவும் கடினமாகும். அப்படியிருக்க இந்த சூழல் கடந்த வாரம் மாறியிருக்கிறது.
அது பற்றின முழு விவரத்தைப் பார்ப்போம்,
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன், இவர் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்த ஒரு மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அதனடிப்படையில் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸரால் மணிகண்டன் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தல் வழக்கு நிரூபிக்கப்பட்டதால் 7 ஆண்டு சிறை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு போஸ்கோ சட்டத்தின் படி10 ஆண்டு என மொத்தம் 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் கூடவே அபராதமும் விதிக்கப்பட்டது. ஆகவே மணிகண்டன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மணிகண்டன் வேலூர் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர் வேலூர் திரு.முஹம்மத் சையீத் அவர்கள் நடத்தி வந்தார்.
அப்படியிருக்க கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது.
அதில், மேல்முறையீட்டு மனுதாரருக்கு எதிராக சாட்சியம் அளித்த சாட்சிகளின் உண்மைத்தன்மை முழுவதும் நம்பும் படியாக இல்லை மேலும் முக்கியமான போதிய சாட்சிகளை அரசு தரப்பு சேர்க்கவில்லை என கூறி மணிகண்டனுக்கு அளித்த 17 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுதலை செய்தது. (இதில் புகார்தாரரான பெண் அவரது இசைவோடு மணிகண்டனுடன் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள சென்றார். அந்த பெண்ணை வீட்டிலிருந்து அழைத்து வந்த நபரை போலிசார் சாட்சியாக பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
இது குறித்து வழக்கறிஞர் திரு முஹம்மத் சையித் கூறும்போது, காதல் ஜோடிகள் எல்லையை மீறி பழகிவிடுகின்றனர், இந்த சங்கதி பெற்றோர்களுக்கு தெரியவந்து சர்ச்சையாகும் போது, பெண் தரப்பில் காதலன் மீது பொய்யாக புகார் அளிக்கிறார்கள். மகளை கடத்தி கற்பழித்துவிட்டதாக ஸ்டாராங்காக புகாரில் குறிப்பிடுகிறார்கள்.
இந்த காதல் ஜோடிகள் ஏற்கனவே இருவரும் இசைந்து தவறு செய்துவிட்டபடியால் மருத்துவ பரிசோதனையின் போது காதலன் சிக்கிக் கொள்கிறார்.
இப்படிப்பட்ட புகாரின் பேரில் விசாரிக்கும் காவல் துறையினர் ஆரம்ப கட்டம் முதல் விசாரிக்க வேண்டுமல்லவா, பெண் தரப்பின் புகாரை அப்படியே ஏற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையில் இறங்கிவிடுகின்றனர்.
இப்படி கைது செய்யப்படும் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகிவிடுகிறது. இதற்கு முன்னரே வேறு ஒரு வழக்கில் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆகவே தொடர்ந்து இது போன்ற காதல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு போக்சோ சட்டம் பாய்வதால் இளைஞர்கள் சிறையை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். போக்ஸோ சட்டம் இது போன்றவைகளுக்காக கொண்டு வரப்படவில்லை.
ஆகவே மணிகண்டன் வழக்கை முன்னுதாரணமாக வைத்து போக்சோ சட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த காவல் துறையினர் முன்வரவேண்டும் என்றார்.