சென்னை மால்களில் நடக்கும் கிளு கிளு சரக்கு பார்ட்டிகள்!கண்டு கொள்ளாத போலிசார்!

ம.பா.கெஜராஜ்,
தலைநகர் சென்னையில், பல மால்களில் இரவு நேர பார்கள் ஆங்காங்கே இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளும் இளம் வயது ஆண் பெண்கள் விடிய விடிய குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டு சட்ட விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிப்படையாக செயல்படும் இப்படிப்பட்ட நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட சட்ட விரோத சரக்கு பார்களுக்கு சாட்சாத் மதுவிலக்கு போலிசாரே பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் சென்னை அண்ணா நகரில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னை,அண்ணா நகரிலுள்ள வி.ஆர். என்கிற பிரபல மாலின் மேல் தளத்தில், சரக்கு ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிக்கு "ஆப் என்கிற செயலி மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த ஆப் மூலம் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் பதிவு செய்துக் கொண்டார்கள்.
இப்படி அடிக்கடி அந்த வி.ஆர்.மாலில் இந்த கூத்துக்கள் நடத்தப்படுகிறதாம். இந்நிலையில் கடந்த 22.05.2022 ஆம் தேதி நடைபெற்ற கும்மாளத்தில் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களை உசுப்பேத்த பிரேசிலைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மந்த்ரா கோரா என்பவரின் ஆடல் , பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூபாய் .1.500 வசூலிக்கப்பட்டுள்ளது. பார்ட்டியின் போது குடிக்கும் சரக்குக்கு தனி பணம் வசூல் செய்யப்படும்.
இந்நிலையில் மேற்படி வி.ஆர். மாலின் 4-வது மாடியில் நடைபெற்ற இந்த மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், வித விதமான மதுபானங்களைக் குடித்துவிட்டு, போதையில் உற்சாகமாக கும்மாளம் அடித்தனர்.
இதில்,சென்னை மடிப்பாக்கம் ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவர், தனது நண்பர்கள் நீக்கல், ஐஸ்வர் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார்.
மென் பொறியாளரான இவர், ஃபுல் போதையில் ஆட்டம் போட்டுள்ளார். அப்படியிருக்க திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார் . அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவர் அளவுக்கு அதிகம் மது அருந்தியிருந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரவீன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஷ்வரி, அண்ணா நகர் காவல் துணை ஆணையர் சிவ பிரசாத் மற்றும் திருமங்கலம் போலீஸார் சம்பந்தப்பட்ட வணிக வளாகத்துக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் மது விருந்து நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் .
பின்னர், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மஞ்சுளாவும் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த 844 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.
மேலும், சட்ட விரோதமாக மது விருந்து நடத்தியதாக , நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . மேலும் , வணிக வளாகத்தின் 3 - வது தளத்தில் உள்ள பாரை சோதனை செய்தபோது , அதுவும் உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டது தெரியவந்தது.
. சென்னையின் மையப் பகுதியில், முறையான அனுமதியின்றி மது விருந்து நடைபெற்றதும், அதில் பங்கேற்ற மென் பொறியாளர் உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வி.ஆர். மாலில் அனுமதியின்றி செயல்பட்ட பாருக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. பணியாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர் . திருமங்கலத்தில் உள்ள பிரபல வி.ஆர். மாலில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மது விருந்தில் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் பல இடங்களில் அனுமதி இல்லாமல் பார்கள் நடைப்பெற்று வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் பார்கள் மீது போலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக மதுவிலக்கு பிரிவு போலிசார் இவற்றை ஊக்குவிக்குவதை கைவிட வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள்.