பெருகிவரும் குழந்தை திருமணம்! ஊக்குவிக்கும் ஊராட்சி தலைவர்கள்! அதிர்ச்சியில் அலுவலர்கள்!

ம.பா.கெஜராஜ்,
குழந்தை திருமணம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அப்படியிருக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பெருகி வருகிறது.
குறிப்பாக கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடந்ததுள்ளன. வீட்டிலும், கோவில்களிலும் இப்படிப்பட்டதிருமணங்கள் மிக ரகசியமாக நடந்துள்ளன.
இந்த தகவலைத்தொடர்ந்து, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துவது, பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில்,குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலத்துறை, 'சைல்டு லைன்' தன்னார்வலர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சமூக நலத்துறை அலுவலர்கள், கொரோனா தொற்று ஆரம்பித்த சில நாட்களில் இருந்து, 18 வயது பூர்த்தியாகாத சிறுமியருக்கு திருமணம் அதிகம் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்,கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த, 2020ம் ஆண்டிலிருந்து, தற்போது வரை குழந்தை திருமணங்கள் பெருகிவிட்டது.
2020ல் இருந்து தற்போது வரை 83 புகார்கள் வந்ததைத் தொடர்ந்து 66 புகார்களுக்கு, திருமணம் நடக்கும் முன்பாகவே தடுத்து நிறுத்தி உள்ளோம். 15 புகார்களுக்கு, திருமணம் நடந்து முடிந்த பின் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆறு திருமணங்கள் பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுலேயும் இரண்டு போலியான புகார்கள் வந்தது என்றனர்.
இதையடுத்து கலெக்டர் ஆர்த்தி, குழந்தை திருமணம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் 'சைல்டு லைன்' மாவட்ட இயக்குனர் தே.தேவன்பு கூறியதாவது:
குழந்தை திருமணம் நடந்தால், மணமகனுக்கு இரண்டாண்டுகள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். திருமணத்தை நடத்தி வைப்போருக்கும், ஆதரிப்போருக்கும் அதே தண்டனை தான்.குழந்தை திருமணம் முடிந்து, பாலியல் உறவில் ஈடுபட்டால், மணமகனுக்கு 'போக்சோ' சட்டத்தின்படி, ஏழு ஆண்டுகளும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தை திருமணத்தை தடுக்க பள்ளிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களிடமும், இருளர் இன மக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.பேருந்து நிலையம், கோவில்களில், திருவிழாக்களிலும், திருமண மண்டபத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் மூலம், குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும்போது, ஊராட்சி தலைவர்கள் எதிர்க்கின்றனர். குழந்தை திருமணத்தை அவர்கள் ஆதரிப்பது, பெரிய பிரச்னையாக உள்ளது என்றார் வருத்தமுடன்.
சமூக நலத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைக்கின்றனர்.