அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது சார்:- எடப்பாடி பேட்டி!

ம.பா.கெஜராஜ்,
தடையில்லா மின்சாரம் வழங்க போதுமான நிலக்கரி கொள்முதல் செய்ய வேண்டும் என சேலம் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்தடையை போக்குவது அரசின் கடமை.
போதுமான நிலக்கரி கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இது தொடர்பாக சட்டசபையிலும் குரல் எழுப்பி உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு முன்னேற்பாடு செய்த காரணத்தினால் தடையில்லா மின்சாரம் வழங்கினோம்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை பல முறை வலியுறுத்தியுள்ளோம். சட்டசபையிலும் பேசியுள்ளோம். ஆனால், குறைக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையிலும் பெட்ரோல், டீசல் விலை குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், விலை குறைப்பு தொடர்பாக மத்திய அரசு மீது முதல்வர் பழிபோடுகிறார் என்று அவர் பேட்டியில் சொன்னார்.