பழைய ஓய்வூதியம் பிரச்சனை - அரசை மிரட்டி பார்க்கும் ஜாக்டோ ஜியோ!

ம.பா.கெஜராஜ்,
அரசு ஊழியர்கள் என்கிற போர்வையில் மிரட்டி சலுகைகளை பறிக்க முயலும் சங்கங்களுக்கு நிதி அமைச்சர் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிக செலவாகும் எனக்கூறி மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள விளக்கமே அதற்கு சான்று.
இந்நிலையில் தான் புது மிரட்டலை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். அதாவது முதலமைச்சருடன் பேசுவதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் கூறும் வார்த்தைகளைப் பொறுத்தே எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்' என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருவாய் மலர்ந்துள்ளார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ' பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது. இந்த விவகாரத்தில் முதல்வரும் அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்' எனத் சொன்னார்.
அவையில் நடந்த இதுகுறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சில கேள்விகளை எழுப்பி, விளக்கத்தையும் சொன்னார்.
அதாவது, 'அமைச்சரின் கருத்து அவரது சொந்தக் கருத்தா.. தமிழக அரசின் கருத்தா என்ற ஐயம் எழுந்துள்ளது' எனக் குறிப்பிடும் 'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதற்கு அமைச்சர் முன்வைத்துள்ள காரணங்கள் இரண்டுதான். அதில் முதலாவதாக புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசின் சார்பிலும் பணியாளர் சார்பிலும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொதுவருங்கால வைப்பு நிதி உள்பட வேறு நிதியங்களுக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன.
இரண்டாவதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற வேண்டும் என்றால் அரசுக்கு அதிக செலவாகும் என்பது. இவை இரண்டும் ஏற்க முடியாதவை'.
' ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொதுவருங்கால வைப்பு நிதிக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல் இருப்பது உண்மைதான். அண்மையில், நிதி மாற்றம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு விடுத்த வேண்டுகோளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிராகரித்துவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு நினைத்தால் மத்திய அரசிடம் பேசி சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் அமைச்சர் கூறுவது என்பது கடமை தவறல் ஆகும்' எனத் தெரிவித்துள்ள ராமதாஸ்.
' நிதி சுமை காரணமாகத்தான் 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. நிதி சுமை அதிகரிக்கும் என்ற உண்மையை அறிந்துதான் 2006, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வாக்குறுதியாக தி.மு.க அளித்தது. தற்போது நிதிச் சுமையை காரணம் காட்டி நிராகரிப்பது என்பது நகை முரண் ஆகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 11 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், 'பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தாவிட்டால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை' எனத் மிரட்டியிருக்கிறார்கள்.
''சட்டமன்ற தேர்தலின்போது, 'பழைய ஓய்வூதிய திட்டமே மீண்டும் கொண்டு வரப்படும்' என தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. அதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டிலும் முதலமைச்சர் உறுதிப்படுத்தினார். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ நடத்திய பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பங்கேற்று, 'கழக அரசு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்' எனக் கூறி எங்களின் போராட்டங்களையும் வாழ்த்திப் பேசினர். அந்த அடிப்படையிலேயே தற்போது முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம்''
''இந்த மாத இறுதிக்குள் சங்க நிர்வாகிகளிடம் பேசி முதலமைச்சர் தீர்வு கொடுக்கவில்லையென்றாலும்கூட நடைமுறை என்னவோ அதனைப் பகிர்ந்து கொண்டால் மறுபரிசீலனை செய்வோம். இல்லாவிட்டால் எங்களின் உயர்மட்டக் குழுவில் உள்ள 150 சங்கங்களைக் கூட்டி உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்று அரசுக்கு லைட்டா மிரட்டல் விட்டுள்ளார்கள் அவர்கள்.