கண்டக்டரை அடித்துக் கொன்ற பயணி! நிவாரணம் அளித்த முதல்வர்!!

ம.பா.கெஜராஜ்,
அரசு பேருந்து கண்டக்டரை போதை பயணி தாக்கி கொலை செய்தார், கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அளித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் பற்றின விவரம் வருமாறு,
விழுப்புரத்துக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை விழுப்புரம் பணிமனையை சேர்ந்த டிரைவர் குணசேகரன் ஓட்டினார். கண்டக்டராக பெருமாள் (56) என்பவர் இருந்தார். அதிகாலை 3:30 மணிக்கு மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணி ஒருவர் ஏறினார்.
அவரிடம் கண்டக்டர் பெருமாள் டிக்கெட் வாங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பயணி போதையில் இருந்ததால் டிக்கெட் எடுக்க மறுத்தார். என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா என்று கண்டக்டர் பெருமாளுடன் தகராறு செய்தார்.
போதை பயணி கண்டக்டர் பெருமாளை தாக்கினார்.இதனால் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் போதை பயணியை மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். மேல்மருவத்தூர் நோக்கி பஸ் சென்றபோது கண்டக்டர் பெருமாள் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு பஸ்சில் சரிந்து விழுந்துள்ளார்.
எனவே மேல்மருவத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. கண்டக்டர் பெருமாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகளை பஸ் டிரைவர் குணசேகரன் மாற்று பஸ் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தார். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் கண்டக்டரை தாக்கியது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கண்டக்டர் பெருமாள் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த அர்ரசு பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் எங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.