வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி.ஆக்கப்படுகிறார்!

வித்யாசாகர்,
வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ், ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளது!
நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்.
அப்படியிருக்க, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் 7 இடம்.
தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 7 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியிடம் இருக்கின்றன.
தற்போது பதவியில் உள்ள எம்.பிக்கள் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோர் வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர்.
இதனால் அந்த மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. தெலங்கானா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் பாஜக இடையே 2 எம்பி பதவிகள் யார் யாருக்கு? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். முதலமைச்சரின் எர்ரவல்லி பண்ணை வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அத்துடன் கடந்த பிப்ரவரி மாதமும் இருவரும் சந்தித்து பேசி இருக்கின்றனர்.
இரண்டு முறை நடந்த இந்த சந்திப்பினால், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் பேசப்படுகிறது. அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படு சூழலில், சட்டப்பேரவையில் தற்போதுள்ள பலத்தின்படி, 3 தொகுதிகளிலும் ஆளும் கட்சி போட்டியின்றி வெற்றி பெறும் அளவிற்கு பலத்துடன் உள்ளதால் தற்போதைக்கு உறுதியாக எதையும் சொல்ல இயலாது! ஏன்னா இது அரசியல் அல்லவா?