தமிழக உளவுத்துறை ஏ.டிஜி.பி.யை குறிவைக்கும் பா.ஜ,க.!பிரதமரின் பாதுகாப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தது! முன்பே சொன்ன சவுக்கு சங்கர்!!

 ம.பா.கெஜராஜ்,

  தமிழக உளவுத்துறை ஏ.டிஜி.பி.டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தையே அடிக்கடி குறிப்பிட்டு பிரச்சனை செய்யும் பா.ஜ.,க இம்முறை பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தை மையப்படுத்தி பிரச்சனையை கையில் எடுத்துள்ளது!

  பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை, தமது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடிகள் இருந்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

  அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

 "2022 ஜூலையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய அளவில் குறைபாடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, அப்போது பயன்படுத்தப்பட்ட கையடக்க மெட்டல் டிடெக்டர்கள், டோர் ஃபிரேம் மெட்டல் டிடெக்டர்கள், வெடிகுண்டு கண்டறியும் சாதனங்கள் போன்றவற்றில் பல காலாவதியானவை மற்றும் பராமரிப்பில்லாமல் நீண்ட காலம் உள்ளவை" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

  அந்த மனுவில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில் நடந்த முறைகேட்டில் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலையீட்டை பாரதிய ஜனதா கட்சி எடுத்துக் காட்டியதாகவும் அந்த விவகாரத்தில் அந்த அதிகாரியை தமிழ்நாடு அரசு அதற்கு நன்கு அறிந்தவர் என்ற காரணத்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டேவிட்சனை பாதுகாத்து அவரை மிகவும் முக்கியமான உளவுப்பிரிவில் தொடர தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக மாநில ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது. கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் இதற்கு உதாரணம். முன்னதாக, கள்ளக்குறிச்சி கலவரம், பிஎஃப்ஐ குண்டுவெடிப்பு மற்றும் மாநிலத்தில் நடந்த பல சம்பவங்கள் தமிழ்நாடு உளவுப்பிரிவின் தோல்வியை நிரூபிக்கின்றன," என்று தெரிவித்தார்.

 பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை, மத்திய அமைப்புகள் சுட்டிக்காட்டிய பின், பாதுகாப்பு உபகரணங்களை பராமரிக்க வலியுறுத்தும் சுற்றறிக்கையை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி அனுப்பியுள்ளார் என்றும் இத்தகைய நிலவர அறிக்கை துரதிருஷ்டவசமாக பிரதமர் மாநிலத்துக்கு வருவதற்கு முன்பாக அனுப்பி விவரம் கேட்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

 இவ்வாறு பாதுகாப்பு சாதனங்களில் சமரசம் செய்து கொண்டதுடன், மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உதாசீனப்படுத்தி விட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள், வரலாற்று தலங்கள் போன்ற முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான பாதுகாப்பு சாதனங்களும் தரம் குறைந்தவையாக உள்ளன என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார்.

எனவே, இந்த விவகாரத்தில் 'பக்கசார்பற்ற' விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு தமிழ்நாடு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் தவறு செய்தது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.   

 இது ஒருபக்கம் இருக்க அண்ணாமலை சுமத்திய இதே குற்றச்சாட்டுகளை ஒரு நாள் முன்பே சமூக செயல்பாட்டாளரான சவுக்கு சங்கர் தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் 'சவுக்கு எக்ஸ்குளூசிவ்' என்ற பெயரில் வெளியிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டக்கூடியதாகும்.

  உளவுத்துறையின் மீது அடிக்கடி சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அவர்கள் தரப்பில் விசாரித்தோம்,  "சென்னை செஸ் ஒலிம்பியாட் நடந்தது ஜூலை மாதம். இந்த சுற்றறிக்கையை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் அனுப்பியது அக்டோபர் மாதம். ஆனால், அதில் பாதுகாப்பு சாதனங்கள் பழுதடைந்ததாகவோ அதே போல் பயன்பாடற்று இருந்ததாகவோ குறிப்பிடவில்லை.

   சாதனங்களின் செயல்திறனை உறுதிப்படுத்த வேண்டியது உளவுத்துறை ஏ.டி.ஜி.பியின் கடமை. அதை உறுதிப்படுத்த சில வழிமுறைகள் அடங்கிய குறிப்புகளை சுற்றறிக்கையாக அனைத்து மண்டல ஐஜிக்கள், ஆணையர்களுக்கு அனுப்பப்பட்ட வழக்கமான நடவடிக்கைதான். ஆக அதை மையப்படுத்தி பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக தகவல்கள் வெளியிடப்படுவது தவறு.  

  "சென்னை ஒலிம்பியாட் நிகழ்வில் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மட்டுமின்றி முதல்வரும் பங்கேற்றுள்ளார். அத்தகைய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அது.

   மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பழுதடைந்த சாதனங்களை பயன்படுத்தியதாக கூறியிருந்தால், அதை சமீபத்தில் திண்டுக்கல் நிகழ்வுக்கு பிரதமர் வருவதற்கு முன்பாக நடந்த பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டுக்கூட்டத்தில் அவரது பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் சிறப்புப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் எழுப்பியிருப்பார்கள்.

   ஆனால், அப்படி எதுவும் எழுத்துபூர்வமாகவோ வாய்மொழியாகவோ பதிவாகவில்லை," என்று சொன்னார்.

  ஆனால் பா.ஜ.க.வின் ஒரே குறி உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.பதவி தான். அதை மையப்படுத்தி அரசு நிர்வாகத்தை கொச்சைப் படுத்தி வருகிறார்கள் என்பதே நடுத்தர பார்வையாளர்களின் கவலை கொண்ட கருத்து.