சாலையில் விழுந்த லட்சங்களை எஸ்.பி.அலுவலகத்தில் ஒப்படைத்த நல்ல மனிதர்!

ஜி.பாலகுரு,

  சாலையில் விழுந்து கிடந்த வங்கிக்கு சொந்தமான பணம் ரூ.3.75 லட்சத்தை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்த பேக்கரி உரிமையாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

   திருவாரூர் அருகே காட்டூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கணினி உதவியாளராக மோகன்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் வங்கிக்கு சொந்தமான ரூ.3.75 லட்சம் பணத்தை பையில் எடுத்துக் கொண்டு திருவாரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார்.

   அப்போது கமலாலயம் மேல்கரை பகுதியை கடக்கும் போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணப்பை கீழே விழுந்துள்ளது. ஆனால் பணம் கீழே விழுந்தது தெரியாமல், வங்கிக்கு மோகன்ராஜ் சென்றுள்ளார்.

   அப்போது மோகன்ராஜ் நழுவவிட்ட பையை அங்கு பின்தொடர்ந்து சென்ற பேக்கரி உரிமையாளர் சத்யநாராயணன் எடுத்தார். பின்னர் அந்தப் பையை எடுத்து கொடுப்பதற்காக மேர்கன்ராஜை விரட்டியுள்ளார். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

   இதையடுத்து சத்யநாராயணன், தனது நண்பர் தண்டலை ஊராட்சி மன்ற உறுப்பினர் தியாகராஜனை அழைத்து கொண்டு, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷை சந்தித்தி பணத்தை ஒப்படைத்துள்ளார்.

   இதனிடையே பணப்பையை காணாமல் போனதை அறிந்த மோகன்ராஜ்,  உடனடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் பணம் ஒப்படைக்கப்பட்ட விவரத்தை அவரிடம் தெரிவித்தனர்.

   தொடர்ந்து பேக்கரி உரிமையாளர் சத்யநாராயணாவை காவல் நிலையம் அழைத்து, அவர் கைகளால் பணம் காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் விஜயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

   பேக்கரி உரிமையாளர் சத்யநாராயணனின் நேர்மையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 வங்கி ஊழியர் மோகன்ராஜ் பணத்தை தவற விடுவது மற்றும் பணம் மீட்கப்படும்  சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.