நாற்காலிகளை உடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!பொது மக்கள் விரட்டினர்!!

நாற்காலிகளை உடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!பொது மக்கள் விரட்டினர்!!

 ஜெ.ஸ்ரீதர்,

  அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள நாற்காலிகளை உடைத்து துவம்சம் செய்தனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

   பண்ருட்டி காந்தி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  பிளஸ் 2 மாணவர்கள் சுமார்,  500-க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர்.

  இந்நிலையில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு முடிதிருத்தம் செய்து வர வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி அறிவுரை கூறினார்.

 பின்னர் மாணவர்களை அவர் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்.

  அப்படியிருக்க தலைமையாசிரியரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாண வர்கள் வகுப்பறையில் ரகளையில் ஈடுபட்டனர். ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். அருகில் இருந்த கழிவறை கதவுகளை உடைத்தனர்.

 ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் முன்பக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த வீடுகளில் புகுந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் வெறுப்படைந்த வீட்டு உரிமையாளர்கள் உருட்டுகட்டை  எடுத்து கொண்டு மாணவர்களை துரத்தினர்.

 இதனால் பயந்துபோன மாணவர்கள் தப்பி ஓடி பள்ளிக்குள் தஞ்சம் அடைந்தனர்.

 இது குறித்து  வீட்டு உரிமையாளர்கள் சிலர் தலைமை ஆசிரியரிடம் புகார் சொன்னார்கள். இது சம்பந்தமாக தலைமை ஆசிரியர்  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றி, குறிப்பிட்ட பெற்றோருக்கு தகவல் அளித்தனர்