மாநகராட்சி பைல்களை எரித்து அழிக்க சொன்னது யார்? அதிமுக பிரமுகரின் சதி!?

ஜான்.மரியஜோசப்,
மாநகராட்சி ஆய்வு மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கோப்புகள் எரிந்த போன சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருக்கிறார்.
இது பற்றின விவரம் வருமாறு,
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே ஆய்வு மாளிகை இருக்கிறது. இங்கு ஆய்வுக்கு வரும் உயரதிகாரிகள் பலர், அரசு விருந்தினர் மாளிகை அல்லது நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனர்.
அதனால், ஆய்வு மாளிகை முதல் தளத்தில் பழைய கோப்புகள், கீழ்தளத்தில் பிளீச்சிங் பவுடர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. பழைய கோப்புகள் மற்றும் பிளீச்சிங் பவுடரில் தீ பரவியது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு அலுவலர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
எனவே இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கவனத்துக்கு சென்றதும், அவர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இச்சூழலில் தீ விபத்து ஏற்பட்டு, பழைய கோப்புகள் எரிந்திருப்பது.
அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தீயணைப்பு துறையினரிடம் கேட்டபோது, 'மாநகராட்சி அலுவலகத்தில் பழைய காகிதங்கள் கட்டு கட்டாக இருந்தன. கோப்புகளா என எங்களுக்கு தெரியாது' என்கிறார்கள்.
இந்நிலையில் அந்த கோப்புக்களை எரித்து அழிக்க சொன்னது யார் என்று விசாரிக்க வேண்டும், இதில் சதி உள்ளது என்று சிலர் அப்பாவியாக முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.