பில்லி சூனியம்:- ஓடும் காரில் தம்பதி கொலை:- கூலிப்படை குறித்து துப்பு துலக்கிய டிஐஜி - எஸ்.பி. டீம்!
ஜி.கே.சேகரன்,
அரக்கோணம் அருகே ஓடும் காரில் தம்பதியை கொன்றது அம்பலம் ஆகியுள்ளது. கூலிப்படையால் ஏற்பட்ட இந்த வழக்கு குறித்து டி.ஐ.ஜி. முனைவர் ஆனி விஜயா இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் எஸ்.பி.டாக்டர் தீபா சத்யன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்ததன் பேரில் கூலிப்படையினர் சிக்கினர்.
இந்த கொலை பற்றி போலிஸ் தரப்பில் தெரிவித்ததாவது,
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மின்னல் கிராமத்தின் ஏரிக்கரை முட்புதரில் சமீபத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட கணவன் மனைவியின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கொலை தொடர்பாக அவர்களின் மருமகனின் தம்பி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52), பட்டு நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி ராணி(47), மகள் சசிகலா. மகன் பெருமாள்.
மகள் சசிகலாவுக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவருடன் திருமணமாகி குடும்பதகராறு காரணமாக கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
குடும்ப செலவுக்கு பலரிடம் மாணிக்கம் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார்.இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், கைலாசபுரம் சாலை பகுதியில் உள்ள ஏரிக்கால்வாய் முட்புதரில் மாணிக்கம், ராணி தம்பதியினர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுதொடர்பாக டிஜஜி மற்றும் எஸ்.பி. ஆகியோரின் உத்தரவின் பேரில் அரக்கோணம் கிராமிய காவலர்கள், 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.
அப்போது இந்த கொலை தொடர்பாக 3 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
சசிகலாவின் கணவர் சாய்ராமுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதித்தது.இதற்கு சசிகலாவின் தாய் ராணி, சூனியம் வைத்திருக்கலாம் என சாய்ராமின் குடும்பத்தினர் கருதி அவர் மீது கோபத்தில் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த சாய்ராமின் தம்பி தரனி என்பவர் அண்ணியின் பெற்றோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி. திருவள்ளூர் மற்றும் திருத்தணியை சேர்ந்த கூலிப்படை கும்பலை அணுகியுள்ளார்.
அதில் கூலிப்படை தலைவன் சுனில்/32,சந்திரன்/40 என்பவரது தலைமையில் 5க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கடந்த 23ம்தேதி மாணிக்கத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
மாணிக்கம் அங்கு தரணிஸ் கூறிய ஆலோசனைப்படி, சுனில் உள்ளிட்ட கூலிப்படையினர் மாணிக்கத்திடம், 'உங்கள் கடன் பிரச்னை இருப்பது எங்களுக்கு தெரியும், திருத்தணியில் ஒருவர் தாரளமாக கடன் தருகிறார். எங்களுடன் வந்தால் உங்களுக்கு கடன் பெற்று தருகிறோம்' என கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய மாணிக்கம் தம்பதியினர், அவர்களுடன் காரில் சென்றனர்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் பொழுது திருத்தணி அருகே சென்றபோது திடீரென ஓடும் காரிலேயே தம்பதியை அந்த கும்பல் சரமாரி தாக்கியுள்ளது.
இதில் இருவரும் காரில் இறந்துள்ளனர். இதையடுத்து அவர்களது உடல்களை அரக்கோணம் அருகே உள்ள கைலாசபுரம் சாலை பகுதி ஏரியில் வீசி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக கொலையான தம்பதியரின் மகளான சசிகலாவின் கணவர் சாய்ராமின் தம்பி தரணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ள நிலையில் கூலிப்படையை சேர்ந்த மற்றொரு நபர் சுப்பிரமணி என்பவர் தலைமறைவாக உள்ளார் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
பில்லி சூனியத்திற்கு கூலிப்படைகளை வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.