மூதாட்டிக்கும் பாலியல் வன்கொடுமை! இபிஎஸ் அறிக்கைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி!

  மூதாட்டிக்கும் பாலியல் வன்கொடுமை! இபிஎஸ் அறிக்கைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி!

 ம.பா.கெஜராஜ்,

 போதை ஆசாமிகளால்  மூதாட்டிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதிய பெண் ஒருவர் நேற்று மாலை புலவனூர் சாலையில் தனியாக நடைபயிற்சி செய்ய சென்றுள்ளார்.

  அப்போது அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்த மர்ம நபர்கள், அவரை பார்த்துள்ளனர். உடனே அந்த பெண்மணியை தரதரவென அருகில் உள்ள சவுக்குத் தோப்பிற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

  மூதாட்டி கூச்சலிட்டதால் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர். பின்னர் அவருடைய ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை அப்பகுதியினர் கண்டுபிடித்து கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதில் காடாம்புலியூர் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த சுந்தரவேல் என்பவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. போதை கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள திமுக ஆட்சியில் 80 வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இப்படியான கேவலமான ஆட்சியை கண்டுள்ள மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இதற்கு திமுக தரப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பதிலில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளி சுந்தரவேலை போலீஸ் சுட்டுப் பிடித்துள்ளது என்றும், இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காவல் துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்ததை பொறுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி , அவதூறு அரசியல் தொடங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், "இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக, பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் நிலை இருந்தது" என்று விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் அந்த நிலை மாறி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டு இருந்தாலும் விரைந்து விசாரணை நடத்தி, தக்க தண்டனை பெற்றுத் தரப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நடந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தன்னுடைய ஆட்சி சமயத்தில் நடந்த குற்ற சம்பவங்களை மறைத்துவிட்டு, திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மட்டுமே பூதாகரமாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் மறதி நோய்க்குச் சிகிச்சை பெறுவது நல்லது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கூட்டணிக்குள் நடக்கும் பிரச்னைகளையும், பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களையும் சமாளிக்க முடியாமல் திணறி வரும் எடப்பாடி பழனிசாமி, அதனை மடைமாற்றுவதற்காக வீணாக அவதூறுகளை பேசி வருகிறார். ஆனால், அது மக்கள் மத்தியில் எடுபடாது. 2026ஆம் ஆண்டு திமுக ஆட்சிதான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். கையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது எடப்பாடி பழனிசாமி காப்பாற்றிக் கொள்வாரா? அல்லது அதையும் அமித்ஷா காலடியில் அடமானம் வைத்துவிட்டாரா என்றும்  காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.