காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி! களையெடுத்தால் சிக்கும் கறுப்பாடுகள்! 80 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம்!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தின் சிறப்பான காவல் துறையில் விரைப்பான அதிகாரிகள் இருந்தது போய் தற்போது கரப்ஷன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சில அதிகாரிகள் நடவடிக்கைகள் உள்ளன. பதவி அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்திவரும் ஒரு சிலரின் செயலால் அத்துறைக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
இந்த சூழலில் தான் ஜெயராமன் என்கிற ஐபிஎஸ் அதிகாரி சிறுவன் கடத்தலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளார்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்
மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், திருவாலங்காடு காவல்நிலையத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரிக்க முயன்றார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அதிமுக கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இல்லையா? என்றே விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி 'ஆள் கடத்தலில்' ஈடுபட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி விவாத பொருளாகவே மாறவில்லை என்று செய்திகள் வெளியாகிவருகிறது.
பொதுமக்களை காக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையை தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் இல்லையா?
தமிழகத்தில் தினம் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொங்கு மாவட்டங்களில் வயதானவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர் ஜபகர் அலி, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது கூட கடலூரில் 80 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் செய்த குற்றச்சம்பவம் நடந்திருக்கிறாது.
காவல்துறை இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், சட்டம் ஒழுங்கை தன் கையில் எடுத்து கொண்டு ஆள் கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை பயன்படுத்தும் தைரியம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிற்கு எப்படி வந்தது.
ஒருவேளை காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் யாருக்கும் தெரிவதில்லையா? இல்லை காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லையா? காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நீதிமன்றத்திற்கு தெரிகிறது, ஆனால் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியவில்லையா? இல்லை அவருக்கு யாரும் தெரியப்படுத்துவது இல்லையா?
இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன. பொதுமக்களின் மனதில் எழும் இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் போல கடந்து செல்லாமல் அரசு இதை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் அவா.
குறிப்பு:- பலமாவட்டங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் மனைவிகளுக்கு தனியார் கல்லூரிகளிலும், பல்கலை மற்றும் நிறுவனங்களில் பணியை பெற்று லட்சக்கணக்கில் சம்பளத்தை அள்ளுகின்றனர்.
ஆனால் மக்கள் அளிக்கும் பெட்டிஷன்களை கிடப்பில் போடுவதிலும், சமூக விரோத பிசினசுகளுக்கு ஆதரவு கரம் கொடுப்பதாகவும் பல தகவல்கள் உலா வருகின்றன. இது போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளை உளவுதுறையின் மூலம் கண்டறிந்து அவர்களை அடக்கிவைக்க அரசு முயல வேண்டும் அல்லவா?