வெளிநாட்டு மோசடி நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் குரல் கொடுப்பதா?

வெளிநாட்டு மோசடி நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் குரல் கொடுப்பதா?

  வ.மகேசு,

    சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டு நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் குரல் கொடுப்பதா என போலீசார் அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

   திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளதை அறிவோம். இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்கள் பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெளிநாடு தப்பி செல்லுதல், ஆன்லைன் பண மோசடி, போலி பாஸ்போர்ட் போன்ற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டவர்கள்.

   இவர்கள் மீதுள்ள நிலுவை வழக்கில் ஜாமின் பெற்று அல்லது வழக்கில் விடுவிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தாயகம் திரும்பும் வரை, இந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பர். சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் சிறை கைதிகள் போல் நடத்தப்பட மாட்டார்கள்.

 இவர்கள் சமைத்து உண்ண, மொபைல்போன், லேப்டாப் பயன்படுத்த சிறப்பு அனுமதி உள்ளது. இவர்கள் குடும்பத்தினரும் இங்கு வந்து பார்த்து செல்லலாம்.

 அப்படியிருக்க இலங்கை நபர்கள், தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.  இதில் உண்ணாவிரத்த்தை ஆதரித்து அரசியல்வாதிகளும் குரல் கொடுத்துள்ளது தான் கேவலத்தின் உச்சகட்டம்.

  விடுவிக்க கோரி வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் நபர்களின் பின்புலம், வழக்கு விபரங்கள் தெரியாமல் அரசியல் ஜால்ராக்கள் ஆதரவுக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

  மேற்படி திருச்சி சிறப்பு முகாம், மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டாலும், இது  வருவாய் துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதற்கும் சிறைத்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

 எனினும், இந்த சிறப்பு முகாம் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும். இங்குள்ள நபர்கள் தினமும் எண்ணப்பட்டு, கையெழுத்து போட வேண்டும்.இங்குள்ள வெளிநாட்டு நபர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமினில் விடுவிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், பாஸ்போர்ட் மோசடி போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள். இவர்களில் சிலர் லம்போகினி கார், பல்வேறு இடங்களில் பண்ணை வீடு வைத்துள்ளனர். மேலும் சர்வதேச போதை பொருள், ஆயுத கடத்தல் இணைப்பில் உள்ளனர்.  

   அதனால் தான் இந்த மாபியா கும்பலின் நடவடிக்கை, நடமாட்டத்தை 'க்யூ' பிரிவு போன்றோர் கண்காணித்து வருகின்றனர். இவர்களை சந்திக்கும் நபர்கள், அவர்களின் பின்புலம் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.

 சிறப்பு முகாமில் உள்ள நபர்களை விடுவித்தால் அவர்கள் மீண்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தங்கள் நாடுகளுக்கு தப்பி செல்ல வாய்ப்புகள் அதிகம்.

 சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த தனுக்கா ரோஷன் என்பவரின் பிறந்தநாள் சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அதற்காக 'மாபியா' தனுக்கா ரோஷன் என எழுதப்பட்ட, 18 கிலோ எடை கொண்ட கேக் சிறப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதை வெட்டி கொண்டாடினர்.

 இந்த மாபியா கேக் சம்பவம் ஒன்றே இந்த சிறப்பு முகாமில் உள்ள நபர்கள் யார், என்ன பின்னணி கொண்ட மாபியா கும்பல் என்பதை புரிந்து கொள்ளலாம்.

 இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தின் பெயரும் முகாம் தான், இலங்கை தமிழகளை தங்க வைத்துள்ள இடத்தின் பெயரும் முகாம் தான். இவைகளுக்குள்ள வித்தியாசம் பற்றி தெரியாமல் முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய் என்று முழங்கும் அரசியல் வாதிகளின் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்லவா?