ரயில் பாதையை சேதமாக்கும் மணல் தயாரிப்பாளர்கள்:- விபத்தை தவிருங்கள் ஆபிசர்!

ம.பா.கெஜராஜ்,
ரயில் பாதையை சேதமாக்கும் மணல் தயாரிப்பாளர்களை கைது செய்து விபத்தை தவிருங்கள் ஆபிசர் என்று பொதுமக்கள் ஆவலோடு கேட்கிறார்கள்.
வாணியம்பாடியின் பிரபல பெண் சாராய வியாபாரி மற்றும் கூட்டாளிகள் உட்பட 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள். இதை அறிந்த திருப்பத்தூர் மக்கள் சிலர் ஆபிசர்ஸ்களிடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
செத்து போன பாம்பை அடிக்கிறீங்களே, மணல் தயாரிப்பாளர்களை பிடிக்கமாட்டீங்களா ஆபிசர்ஸ் என்பது தான் அந்த கேள்வி.
இதன் அர்த்தம் யாதெனில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி காவல் நிலையம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம்,ஜோலார்பேட்டை மற்றும் நாட்றாம்பள்ளி காவல் நிலையங்களுக்குட்பட்ட பல கிராமங்களில் மணல் தயாரிப்புக்கென பெரிய அளவிளான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அதையெல்லாம் அடித்து நொறுக்கி சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாராய வழக்குகளில் சிக்கி வரும் பெண் சாராய வியாபாரியை மடக்கி மடக்கி கைது செய்து அதை பரபரப்பாக்குவது சும்மா கண்துடைப்புதான் என்கிறார்கள்.
உண்மையியே அந்த சாராய வியாபாரி மகேஷ்வரி மீது நிரந்த நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தால், ஏற்கனவே 68 எப் (1) மற்றும் 65 எப் (2) போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட சொத்து பறிமுதல் நவடிக்கையினை தூசு தட்டினால் கண்டிப்பாக 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தரலாம்.
அதை செய்வதை தவிர்த்துவிட்டு, செத்து போன பாம்பை அடிப்பது போல அல்லவா நடக்கிறது என்கிறார்கள்.
சரி மணல் மேட்டரை பார்ப்போம், திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டியில் திருமூர்த்தி, தினகரன், கீர்த்தி, காகங்கரையில் திருப்பதி, சீனிவாசன், கொரட்டியில் பிரகாசம், சென்ட்ராயன், பாஸ்கர், நாட்றாம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டையில் ராஜ்குமார்,ஏழுமலை, அசோகன் மற்றும் திமுக வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் என பலர் இந்த மணல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிளை நதிகள் மற்றும் விளை நிலங்கள் போன்றவற்றிலிருந்து மண்ணை அள்ளி அதை பல்வேறு பார்முலாவில் அலசி மணலாக மாற்றி பெங்களூரு மற்றும் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தி விற்று வருகிறார்கள்.
இதற்கு லீடராக இருப்பவர் திருமூர்த்தி என்று கூறப்படுகிறது.
இவர்கள் மணல் தயாரிப்புக்காக மண் எடுப்பதால் நதியின் பாதை திசை திருப்பப்படுகிறது, விளை நிலங்கள் மலட்டுத்தன்மையை அடைகிறது.
அதைவிட நாட்றாம்பள்ளியில் திமுக ஊராட்சி மன்ற தலைவரால் ரயில்வே டிராக்கிற்கு அருகிலேயே மண் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
இது சென்னை-திருவனந்தபுரம் செல்லும் ரயில்வே தடம் ஆகும். ரயில்வே ஊழியரின் ஒத்தாசையுடன் அங்கு மண் தோண்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பள்ளம் மிகப்பெரிய ஆபத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகவே உள்ளது. இதெல்லாம் உள்ளூர் சிஐடிகளுக்கு நல்ன்றாகவே தெரியும்.
இயற்கை வளங்களை அழித்து கோடிகளை அள்ளும் களவாணிகளை அடையாளம் காட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர்களின் வாயில் எலும்பு துண்டுகள் திணிக்கப்பட்டிருக்கின்றன. அரசுக்கு உளவு சொல்லக்கூடியவர்கள் உளுந்துவடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க மாவட்ட அளவிளான ஆபிசர்களை கடந்து பலருக்கு லஞ்சம் கொடுக்கிறோம் என்று சொல்லும் மணல் களவாணி திருமூர்த்தி என்பவர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறோம் என்று பட்டியல் போடுகிறாராம்.
ஆக பணம் மட்டுமே குறி? இயற்கை வளம் எப்படி அழிந்தாலும் எங்களுக்கென்ன என்று செயல்படும் மேற்படி மணல் களாவாணிகளையும், அதற்கான தொழிசாலைகளையும் விட்டுவிட்டு செத்து போன பாம்பான சாராய வியாபாரியை கைது கணக்கு காட்டுவது கண்துடைப்புத்தான் என்கிறார்கள்.
குறிப்பு: மணல் தயாரிப்பு களவாணிகளுக்கு ஆதரவாக மாவட்ட அளவிளான அலுவலர்களே துணை போவதால் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி பேராணை (ரிட்) தொடுக்க ஆவணங்களை மக்கள் நல விரும்பி ஒருவர் சேகரித்து வருகிறாராம்.