போதை பொருள் தகறாறு:- துப்பாக்கி சூடு 6 பேர் பலி!

அ.அலெக்ஸாண்டர்,
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு 6 மாத குழந்தை, தாய் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். சிலர் காயம் அடைந்து கிடந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும் போது, குழந்தையையும், அதனுடைய 17 வயது தாயையும் தலையில் சுட்டுள்ளனர்.
போதை பொருள் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இத்தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளனர். இது தற்செயலான தாக்குதல் அல்ல. ஒரு குடும்பத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் கடந்த வாரம் போதை பொருள் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல், புளோரிடாவின் போர்ட் பியர்ஸ் பகுதியில் நடந்த மார்டின் லூதர்கிங் தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது மர்ம நபர்கள் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.