மாணவர்களுக்குள் மோதல்!பிளேடால் அறுத்த பரிதாபம்!

மாணவர்களுக்குள் மோதல்!பிளேடால் அறுத்த பரிதாபம்!

  கு.அசோக்,

  அரசு மேல்நிலை பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே மோதல்- மாணவனை இன்னொரு மாணவன் பிளேடால் கிழித்ததில் மாணவன் படுகாயம்.

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பூசாரி வலசை பகுதியை சேர்ந்த கோவிந்தன், மற்றும் அதே  ஊரை சேர்ந்த பிரவின் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இதனிடையே நேற்று வகுப்பறையில்  இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த பிரவின் இன்று காலையில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த கோவிந்தனை தடுத்து நிறுத்தி  மறைத்து வைத்திருந்த பிளேடால்  கை , மார்பு ,உள்ளிட்ட பகுதிகளில்  கிழித்துள்ளான்.

   இதனால் கோவிந்தன் அலறினான், அவனது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

   அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.