பிரபாகரன் இருக்கிறார் என முழங்கிய தலைவர்கள்! கண் விழித்துக்கொண்ட இந்திய உளவு அமைப்புகள்!

பிரபாகரன் இருக்கிறார் என முழங்கிய தலைவர்கள்! கண் விழித்துக்கொண்ட இந்திய உளவு அமைப்புகள்!

ம.பா.கெஜராஜ்

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரைவில் தோன்றி தமிழ் தேசியத்துக்கான புதிய கட்டமைப்பை பற்றி அறிவிப்பார் என்று உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். இவரது  தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள். இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று  இலங்கை ராணுவம் சார்பில் அதை மறுத்துள்ளார்.   

 இந்நிலையில்  பிரபாகரனின் மரணம் மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 அது பற்றின விவரம் வருமாறு,

 கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மே 18-ஆம் தேதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த உடனேயும் அதற்குப் பிறகும் அவர் மரணமடையவில்லை என்று கூறி வந்துள்ளனர்.

 

  1. பிரபாகரன் கொல்லப்பட்ட சில நாட்களில் அதாவது 2009ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி பேசிய பழ. நெடுமாறன், அந்தச் செய்தியைக் கடுமையாக மறுத்தார். "பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஏற்கெனவே மூன்று முறை இலங்கை ராணுவம் பொய்ச் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான "ரா' இருக்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. அவரது மண்ணில் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார்," என்று நெடுமாறன் சொன்னார்.
  2. அடுத்த நாள், அதாவது 2009 மே 22ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன், "பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக - நலமாக இருக்கிறார்" என்று அறிக்கை வெளியிட்டார். (ஆனால், இதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு வெளிநாட்டு ஊடகத்திடம் பேசிய அவர் பிரபாகரன் மரணம் அடைந்ததாகக் கூறினார்).

  3. மே 24, 2009: பிரபாகரன் மரணமடைந்த தருணத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அதை ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருப்பதாகவே பல காலம் தெரிவித்து வந்தார். 2009ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பேசிய வைகோ, "தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும் உலகத் தமிழர்களின் இதய நாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார். தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார்" என்றுமவர் பாணியில் சொன்னார்.
  4. ஜனவரி 20, 2010: பிரபாகரனுடைய தந்தை வேலுப்பிள்ளை இறந்தபோது, அதில் பங்கேற்க இலங்கை சென்று திரும்பினார் திருமாவளவன். அப்போது பேசிய அவர், "எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர்.

 பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார்" என்று தெரிவித்தார் திருமாவளவன். ஆனால், 2021 டிசம்பரில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தான் நம்பவில்லை என்று அவரே சொன்னார்.

  1. ஜூன் 11, 2009: அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வைகோ கூறினார். "புலிகளுக்கு நிகராகப் போர் நடத்தியவர்கள் யாரும் இல்லை. பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்" என்றார்.
  2. 2014 ஜனவரி 16: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரன் மீண்டும் வந்து தமிழீழத்தை மீட்பார் என்று தெரிவித்தார். "வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதேபோல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்ச கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்தக் காலம் வெகுவிரைவில் வரும்" என்று பிளிறினார். 7. 2018 அக்டோபர் 13: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததில் இருந்து இப்போதுவரை, பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருபவர் பழ. நெடுமாறன் மட்டும்தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போதுவரை, தொடர்ந்து அந்த நிலைப்பாட்டிலேயே அவர் இருந்து வருகிறார்.

இதற்கு முன்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், "இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர்.

இதுபோன்ற பிரச்னைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார்" என்றார்.

  1. 2018 டிசம்பர்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வைகோ, "பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். கோடியக்கரை கடலில் இறங்கி பிரபாகரனின் கனவை நனவாக்குவேன் என்று சபதமிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் பிரபாகரன் மரணமடையவில்ல; அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே கூறி வந்தனர். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல அந்தக் கருத்துகளை அவர்கள் மாற்றிக்கொண்டனர். ஆனால், பழ. நெடுமாறன் அவர் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

 இந்நிலையில் பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக கியூ பிரிவு போலீசாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம். அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

 குறிப்பு:-பிரபாகரன் அவர்களின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சம்மந்தமே இல்லாமல் பந்தாகாட்டி கல்லாகட்டி வரும் அல்லகைகளுக்கு நெடுமாறன் அய்யா அவர்களின் தகவல் கசக்கத்தான் செய்யும்.