பெண் போலிஸை கலங்கப்படுத்தியது குறித்த பழனிச்சாமியின் கேள்வியும் முதல்வரின் பதிலும்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த 31 ஆம் தேதி, சென்னை, விருகம்பாக்கம், தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.
அந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலிசாரை தொடர்ந்து அவர்கள் ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவத்துக்கு காரணமான ஒருவனை எட்டி பிடித்தார், மற்றோருவன் தப்பியோடிவிட்டான். பின்னர் அவனும் பிடிபட்டான்.
விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
பெண் காவலர் கதறி அழுதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த பெண் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தை மையப்படுத்தி சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்குரிய விளக்கத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும்.
அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும். அதனால்தான் நான் சொன்னேன், நான் ஓடி, ஒளியமாட்டேன், பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று சொன்னேன்.
31-12-2022 அன்று இரவு 10-45 மணிக்கு பெண் காவலர் ஆர்-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடனே எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டப்பிரிவு 4-ன் கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சிகளை காவல் ஆய்வாளர் விசாரணை செய்து, சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 3-1-2023 இரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் 4-1-2023 அன்று காலையே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
புகார் கொடுத்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற அந்தக் கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.
எஸ்.பி. அந்தஸ்த்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை, இதுமாதிரி புகாரில் அலைக்கழித்த ஆட்சிதானே அ.தி.மு.க. ஆட்சி.
இந்த அரசைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், ஒட்டுமொத்தமாக, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறதென்று சொன்னார்.
ராமநாதபுரம், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு விழாவில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் மரணம், யாருடைய ஆட்சியில்?
தேவர் ஜெயந்தி விழாவில் மதுரையில் வெடிகுண்டு வீச்சு-4 பேர் மரணம்.
சிவகங்கை, திருப்பாச்சேத்தி உதவி ஆய்வாளர் ஆன்வின் சுதன் படுகொலை 2012-ல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் தானே?
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது, பொதுமக்கள் ஐ.ஜியை தரையில் இழுத்துச் சென்றது, அவரது கைத்துப்பாக்கி காணாமல் போனது.
அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா?
வன்னியர் சங்க மாநாட்டைத் தொடர்ந்து எழுந்த சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையில் 100 வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைத்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.
ஜல்லிக்கட்டு அனுமதிக்கு அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி, பொதுமக்கள் வாகனங்களை காவல் துறையினரே தீயிட்டு கொளுத்தியதும் அ.தி.மு.க ஆட்சியில்தான்.
சாத்தான்குளத்தில் லாக்கப் வன்முறை, காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் இல்லை, அ.தி.மு.க ஆட்சியில்தான்.
இந்த ஆட்சியைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புள்ளிவிவரங்களுடன் பேசினார்.