இடிந்து விழுந்த மண்டபம்:- அதிகாரிகளை அனுமதிக்காத நிர்வாகிகள்! உரிமம் ரத்தாகுமா?

இடிந்து விழுந்த மண்டபம்:- அதிகாரிகளை அனுமதிக்காத நிர்வாகிகள்! உரிமம் ரத்தாகுமா?

 ஜி.கே.சேகரன்,

 ஆம்பூரில் தனியார் திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார்  சின்னமசூதி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் (பூவா ஷாதி மால்)   தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  இரவு போளூர் பகுதியைச் சேர்ந்தவர்களின்   திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 அப்போது  மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த ஆம்பூர் மற்றும் போளூர் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

   இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள்  மற்றும்  மண்டபத்தில் இருந்தவர்களை உடனடியாக  வெளியேற்றிவிட்டு மண்டப நிர்வாகிகள் மண்டபத்தை இழுத்து பூட்டி உள்ளனர்.

  மேலும் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

   இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஆம்பூர் நகர காவல் துறையினர் திருமண மண்டபத்திற்குள் செல்ல முயன்றனர்.

 ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் அப்பகுதியில் சிறிது நேரம் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் மண்டபம் நிர்வாகிகள் மண்டபத்திற்குள் அனுமதித்த நிலையில் வருவாய்த்துறை  மற்றும் காவல்துறையினர் திருமண மண்டபத்திற்குள் சென்று சேதம் அடைந்ததை பார்வையிட்டு விபத்து குறித்து தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ஆம்பூரில் தனியார் திருமண மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு அற்ற முறையில் செயல்பட்டு வரும் இத்திருமண மண்டபத்திற்கான உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள்  மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.