"டுபாக்கூர் டாக்டர் பட்டம்" நிகழ்ச்சி அம்பலம்! பிரபலங்களுக்கு தலைகுனிவு! நீதிபதி பெயரால் அண்ணா பல்கலையில் மோசடி!

ம.பா.கெஜராஜ்,
சமீப காலமாக போண்டா விற்பனை செய்யும் பாட்டிக்குக் கூட டாகடர் பட்டம் வழங்கப்படுவதை பல செய்திகள் மூலம் அறிந்து வருகிறோம். ஜெருசலேம், மனித உரிமைகள் கழகம் பல்கலைகழகம் என்று உள்ளூரில் இல்லாத பெயரை பயன்படுத்தி 'கவுரவ டாக்டர்' பட்டங்கள் வழங்கப்பட்டுவருகிறது.
இது பிசினஸாகவே பார்க்கப்படும் நிலையில், அண்மையில் அப்படி 40 பேருக்கு 'கவுரவ டாக்டர்' பட்டமளிப்பு விழா சென்னை அண்ணாபல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடானது.
அதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டிம் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார்.
குறிப்பாக நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்தது.
தாமதமாக இதை புரிந்துக் கொண்ட அண்ணா பல்கலைகழக நிர்வாகம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி அளித்தார்.
அதில், இதுபோன்ற தனியார் அமைப்பினர் ஓட்டல்கள் மற்றும் தனியார் இடங்களில் வைத்தே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழத்தில் நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஜனவரி மாதமே வந்து அனுமதி கேட்டுள்ளனர். வெளியாட்கள் நடத்தும் நிகழ்ச்சி எந்தமாதிரியான நிகழ்ச்சி என்பதை அலசி ஆராய்ந்த பிறகே அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியை 'டீன்' கொடுக்க வேண்டும்.
"ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் கடிதம் வாங்கிக்கொண்டு வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இதனால் நிகழ்ச்சியை நடத்துவதற்கு டீன் அனுமதி அளித்துள்ளார்".
போலியான கவுரவ டாக்டர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நிகழ்ச்சி நடத்தி வழங்கி இருக்கும் சம்பவம் தொடர்பாக கவர்னரின் செயலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இது போன்ற விருதுகலை வாங்கும் பிரபலங்களும் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக வளாகம் பழமையும், பெருமையும் புனிதம் வாய்ந்ததாகும். ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் வழங்கியதாக கூறப்படும் கடிதம் போலியானதாக இருக்கும் என்று கருதுகிறோம்.
அவர் எழுதி இருக்க முடியாது. நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தினத்தில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இந்த செயலுக்கு வருந்துகிறோம். கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறும்போது, பட்டமளிப்பு விழாவை நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அழைப்பிதழின் பெயரிலேயே விழாவில் கலந்துக் கொண்டேனே தவிர மற்றபடி சிபாரிசு கடிதம் எதுவும் அளிக்கவில்லை என்றார்.