சென்னையில் ரவுடி கும்பல் அட்டூழியம்! 8 பேருக்கு அரிவாள் வெட்டு!

சென்னையில் ரவுடி கும்பல் அட்டூழியம்! 8 பேருக்கு அரிவாள் வெட்டு!

G.Santhakumar,

  சென்னை வியாசர்பாடி பகுதியில், ரவுடி கும்பல் சாலையோரத்தில் நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கியும், பொதுமக்களை அரிவாளால் வெட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

 இது பற்றின விவரம் வருமாறு, 

 சென்னை, வியாசர்பாடி, பி.வி.காலனி, 18-வது தெருவில் நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 8 பேர் கும்பல் வந்தது. அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் நொறுக்கினர். மேலும் கடைகள் மற்றும் கார், ஆட்டோக்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.

   இதனை தடுக்க முயன்ற பொதுமக்களையும் அரிவாளை காட்டி மிரட்டினார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

  அப்போது சிலரை ஓட, ஓட, விரட்டி வெட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 அப்பகுதி மக்கள் பீதியில் கடைகள் மற்றும் வீடுகளை பூட்டினர்.

  பின்னர் அந்த ரவுடி கும்பல் ஷர்மா நகர் மார்க்கெட், சாஸ்திரி நகர், எருக்கஞ்சேரி சாலை மூலக்கடை பகுதிக்கு சென்றனர்.

  அங்கும் அந்த ரவுடி கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டலில் மனைவியுடன் இருந்த வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அந்த வாலிபரின் மனைவிக்கும் வெட்டு விழுந்தது.

  இதைத் தொடர்ந்து ரவுடி கும்பல் செங்குன்றம் நோக்கி சென்றனர். போகும் வழியிலேயும் அவர்கள் வாகனங்களை சேதப்படுத்தி சென்றனர்.

   இந்த தாக்குதலால் மொத்தம் 10 மோட்டார் சைக்கிள்கள், 3 கார், 2 ஆட்டோ, சரக்கு வேன் நொறுக்கப்பட்டது. மேலும் பி.வி.காலனியில் 5 பேருக்கும், எருக்கஞ்சேரி சாலையில் ஒருவருக்கும், மூலக்கடையில் கணவன்-மனைவி என மொத்தம் 8 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

 இதனால் நேற்று இரவு வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் எம்.கே.பி.நகர் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து ரவுடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 வியாபாரிகளும், பொது மக்களும் பணம் கொடுக்க வில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் நாங்கள் யார் என்று நிரூபிப்போம் என்று கூறி இப்படி அராஜகத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.