விருதுநகர் வில்லங்கம்!

விருதுநகர் வில்லங்கம்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

   ராஜபாளையம் அருகே விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியை கைது செய்வதற்கு காவல் துறையினர் காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டி, விபத்தில் இறந்தவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென்காசி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தென்காசி மாவட்டம் தென்மலையை சேர்ந்த செல்லையா என்பவரது மகள் பூமாரியை திருமணம் செய்து, அங்கேயே குடி பெயர்ந்து விட்டார்.

   கல்குவாரியில் வேலை பார்த்து வந்த ரமேஷ், நேற்று முன் தினம் காலை தனது மகன் வினோத் மற்றும் தனது மாமனார் செல்லையாவை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தளவாய்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மாங்குடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் இவர்களது இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிந்த நிலையில், மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்த நிலையில் விபத்து குறித்து அளித்த புகாருக்கு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டிய ரமேஷின் உறவினர்கள், இன்று காலை மருத்துவ மனைக்கு வந்த காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் மொத்தமாக குவிந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  இதனை அடுத்து தங்களின் கோரிக்கைக்கு காவல் துறையினர் உரிய பதிலளிக்கவில்லை என குற்றம் சாட்டிய ரமேஷின் மனைவி பூமாரி உள்ளிட்ட உறவினர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை எதிரே தென்காசி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென்காசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குறிப்பிட்ட நேரத்தில் குற்றவாளியை கைது செய்வதோடு, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட உறவினர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

 

பின்னர் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யும் வரை இறந்தவரின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்திலேயே உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் சமாதனமடைந்தனர்.