மாணவர்கள் பெயரில் விடுதிகளில் மோசடி! ஸ்பெஷல் ஸ்டோரி!!

மாணவர்கள் பெயரில் விடுதிகளில் மோசடி! ஸ்பெஷல் ஸ்டோரி!!

பி.ஆர்.ஆனந்த்,

    திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம்பாடி, அண்டம்பள்ளம், வாளவெட்டி மற்றும் தச்சம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் தங்கிப் பயிலாமலேயே பொய் கணக்கு காட்டி காப்பாளர்கள் மாதா மாதம் பணத்தை அமுக்குகிறார்கள்.

   பல ஆயிரம் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை கையாடல் செய்வதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 இது பற்றி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் விடுதி காப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுதி காப்பாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்த விவரம் வருமாறு,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு விடுதிக்கும் 55 மாணவர்கள் என 49 விடுதிகளில் மொத்தம் 2,963 மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

  தாய் தந்தை இழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவிட்டு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் விடுதியில் தங்கி உணவு அருந்தி படிக்க மாணவர் விடுதியில் ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர் விடுதிக்கு ஒரு மாணவனுக்கு 1100 ரூபாயும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 49 விடுதிகளுக்கு மாணவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வழங்குவதற்காக ஒரு மாதத்திற்கு 32 லட்சம் ஒதுக்கப்படுகிறது.

 அப்படி ஒதுக்கப்படும் நிதி மாவட்டம் முழுவதிலும் உள்ள 49 விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு முறையாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறதா என்றும், மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்களா என்றும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் உள்ளிட்ட அலுவலர்களை நியமித்துள்ளது

  ஆனால் அவர்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாணவர்கள் வராமலேயே விடுதிக்கு வந்ததாக கணக்கு காண்பித்து மாதா மாதம் விடுதி காப்பாளர் பணத்தை அமுக்குகிறார்.

 பல மாதங்களாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு வருவதை கண்டு கொள்ளாமல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதாலட்சுமி செயல்பட்டு வருவதாக ஏழை எளிய மாணவர்களின் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

  குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாளவெட்டி, தச்சம்பட்டு, அண்டம்பள்ளம் மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர் விடுதியில் மாணவர்கள் பல மாதங்களாக விடுதிக்கு வருவதில்லை.

  ஆனால் விடுதியில் மாணவர்கள் தங்கிப் பயிலாமலேயே மாணவர்கள் வந்து தங்கிப் பயில்வதாக மாதா மாதம் ஒரு மாணவனுக்கு ஆயிரம் ரூபாய் என 55 மாணவருக்கு 55 ஆயிரம் ரூபாய் விடுதி காப்பாளர் போலியாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தமிழக அரசு கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 80 லட்சம் முதல் 90 லட்சம் மதிப்பீட்டில் விடுதி கட்டிடம் கட்டப்பட்டு விடுதிக் காப்பாளர், விடுதி சமையலர், விடுதி தூய்மைப் பணியாளர் என நியமனம் செய்துள்ளது.

  விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மூன்று வேலையும் சத்தான உணவு மற்றும் வாரம் ஒருமுறை இறைச்சி உள்ளிட்டவை வழங்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இறைச்சி உள்ளிட்டவைகளை வழங்காமலேயே வழங்குவதாக போலி வருகைப்பதிவேடு தயாரித்து மாவட்ட அலுவலர் துணையோடு பல லட்சம் கொள்ளை அடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்கள் எவரும் தன் கடமையை சரிவர செய்வது இல்லை, விடுதியை நேரில் சென்று பார்வையிட்டு விடுதி காப்பாளர்கள் தினந்தோறும் எத்தனை மாணவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள் என்று மேற்பார்வை செய்வதே கிடையாது.

  ஒவ்வொரு விடுதி காப்பாளர்களிடமிருந்து விடுதிக்கு அரசு ஒதுக்கிய நிதியில் அதாவது 55 ஆயிரம் அதில் 10% பங்களிப்பாக பெற்றுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு, 55 மாணவர்கள் முப்பது நாளும் விடுதியில் தங்கிப்படிப்பதாக 55 ஆயிரம் ரூபாய் விடுதி காப்பாளர் கணக்கிற்கு பணம் மாற்றம் செய்யப்படுகிறது.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, அண்டம்பள்ளம், வாளவெட்டி, தச்சம்பட்டு ஆகிய விடுதிகளில் பணி புரியும் விடுதி காப்பாளர்கள் அருண்குமார், தனராஜ், லாட்கிருஷ்ணன், குமார், தர்மலிங்கம் போன்றவர்கள் இரண்டு விடுதிகளில் கூடுதல் பொறுப்பு செய்துகொண்டு பத்தாண்டு காலமாக ஒரே இடத்தில் பணியாற்றிக் கொண்டு மாவட்ட அலுவலர் கீதாலட்சுமிக்கு லஞ்சம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொய்யான தகவல் அளித்து ஏழை எளிய மாணவர்களின் வாழ்வாதாரமான விடுதி கல்வியினை சீர்குலைத்து வருவதாகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாதம் ஒருமுறை மாவட்டத்திலுளள 49 விடுதிகளிலும் சரியான முறையில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இறைச்சி ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்காததால் விடுதி காப்பாளர் மற்றும் விடுதி சமையலர் ஆகியோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

  கடந்த 2019ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்காமல் விடுதி காப்பாளர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டுகொள்ளாமல் மெத்தன போக்குடன் செயல்பட்ட முன்னாள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் புலனாய்வுத்துறைக்கு புகார் சென்றது.

 அதன் அடிப்படையில் முன்னாள் மாவட்ட அலுவலர் லாவண்யா, கணக்கு அலுவலர் மகேஸ்வரன், விடுதி காப்பாளர்கள் தர்மலிங்கம், மங்கலமேரி ஆகியோர் மீது துறையினர் நடத்திய அத்துமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 36 லட்சம் மோசடி நிரூபிக்கப்பட்டு கடந்த 9/2/2022 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  குறிப்பாக அண்டம்பள்ளம் பகுதியிலுள்ள அரசினர் மாணவர் விடுதி பல மாதங்களாக மாணவர்கள் வராமலேயே மூடி வைத்திருப்பதால் விடுதி முழுவதும் கதவுகள் பூட்டி வைக்கப்பட்டு முள் புதர் போன்று காட்சி அளிக்கிறது.

 விடுதி காப்பாளர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் வழங்கும் உணவுக்கான மளிகைப் பொருட்களை அரசின் உத்தரவுப்படி கற்பகம் கூட்டுறவு அங்காடியில் வாங்க வேண்டிய நிலையில் விடுதி காப்பாளர்கள் அதை தவிர்த்து தனியார் மளிகைக்கடையில் வாங்கியதாக போலி ரசீது தயார் செய்து மாவட்ட அலுவலரின் உதவியோடு பணத்தை எடுத்து சொந்த செலவுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

   மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு விடுதிகளையும் நேரில் சென்று ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

   மேலும் கடந்த சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் விடுதியில் நடைபெறும் முறைகேடு குறித்து தனியாக குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டுமென ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் பேசியது குறிப்பிடத்தக்கது.