கல்யாணம் முடிந்த 2 வது நாளில் 12 மணப் பெண்களை தூக்கியிருக்கிறோம்!

ம.தமிழ்செல்வன்,
நகை பணத்துக்காக கல்யாணம் முடிந்த 2 வது நாட்களில் மணப்பெண்ணை தூக்கிவிடுவோம். அப்படியாக இதுவரை 12 பெண்களை செட்டப் செய்திருப்பதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இது பற்றின விவரம் வருமாறு,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 33). இவருக்கும், மதுரையை சேர்ந்த போலி திருமண கும்பலை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2-வது நாளில் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சந்தியா மாயமானார்.
திருமண ஆசையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தனபால் பரமத்திவேலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி மணப்பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி ஆகிய இருவரும் சேலம் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல் கார் டிரைவர் ஜெயவேல், பெண் புரோக்கர் தனலட்சுமியின் உறவினர் ஏ.சி. மெக்கானிக் கவுதம் ஆகிய இருவரும் பரமத்தியில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மோசடி திருமணங்கள் நடத்திய அய்யப்பன் போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அதாவது அவரை பரமத்தி வேலூரிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த போது அவர் எஸ்கேப் ஆனாராம். அப்படியிருக்க அவர் பேசிய வீடியோ வைரலாக வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல் வேறு பெண்களை வைத்து சுமார் 12 மோசடி திருமணங்கள் நடந்திருக்கிறது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் நெட் ஒர்க் தலைவனாக இருந்து கொண்டு அவன் சொல்கின்ற வேலைகளை நாங்கள் செய்வோம்.
திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார். பிறகு கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம்.
புரோக்கர் பாலமுருகனுக்கும் இந்த திருமண மோசடிகளுக்கு கார் டிரைவர் ஆக ஜெயவேல் இருந்துள்ளார்.
ஓடிவரும் பெண்ணிடம் இருக்கும் பொருளை விற்று கார் டிரைவருக்கு கொடுப்போம். இந்த திருமண மோசடி தொழிலை கடந்த நான்கு வருடங்களாக தமிழக முழுவதும் செய்து வந்துள்ளோம்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 மோசடி திருமணங்களை நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தப்பு பண்ணிட்டேன் இதுக்கு மேல இவங்க கூட நான் சேர மாட்டேன். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேற்படி வீடியோ குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் கூறும்போது, அய்யப்பன் பேசுவதாக கூறும் வீடியோ போலீசார் வாக்குமூலமாக எடுத்தது அல்ல. புகார்தாரர்கள் மூலமாக எடுத்திருக்கலாம்.
வீடியோ பேசிய நபரை உடனடியாக பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தான் அய்யப்பன் தப்பி ஓடினார் என்கிற நிலையில், அய்யப்பன் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்கு இங்கு வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறி போலிசாருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்கள்.