காலாண்டு தேர்வுக்கான வினாதாள்களை செல்போன் கடையில் வைத்த ஹெட்மாஸ்ட்டர்!

காலாண்டு தேர்வுக்கான வினாதாள்களை செல்போன் கடையில் வைத்த ஹெட்மாஸ்ட்டர்!

ம.பா.கெஜராஜ்,

  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்ற ஆண்டு  தேர்வுகளுக்காக மாவட்ட அளவில் வினாத்தாள்களை தயாரிக்க அரசு உத்தரவிட்டது.

  அப்படித் தயாராகும் பொது வினாத்தாள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுக்கப்படும்.

 பின்னர் அவர்கள்  மூலம் ஆசிரியர் பயிற்றுனர் பெற்று பின் பள்ளித் தொகுப்பு, கருத்தாய்வு மையத்தில் கொடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

 இந்நிலையில் கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலர் பழனிராஜ் இன்று நடக்க உள்ள தேர்வுகளின் வினாத்தாள்களை வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு செல்போன் கடையில் கொடுத்து அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் அதனை பெற்றுச் செல்லுமாறு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

 செல்போன் கடையில் இருந்த வினாத்தாள்களை பெற்ற ஆசிரியர் அதில் சில பள்ளிகளுக்கான வினாத்தாள் இல்லாததால் அதனை மீண்டும் செல்போன் கடையிலேயே கொடுத்து விட்டு சென்றார்.

 கடந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் தேர்வு நடப்பதற்கு முன்பாக வினாத்தாள் செல்போன் மற்றும் சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலேயே வினாத்தாள் தயாரித்து பள்ளிகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழங்க உத்தரவிட்டது.

 அப்படியிருக்க, தற்போது வினாத்தாள் வெளியாகி இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

  கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலர் செய்த இந்த செயலுக்கு கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் ஒரு செல்போன் கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.