ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி போட்டிதான்! அடம்பிடிக்கும் ஓ.பி.எஸ்.!!

ம.பா.கெஜராஜ்,
எங்க அணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது கன்பார்ம் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வும் காங்கிரசுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அமைத்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே த.மா.கா. போட்டியிட்ட தொகுதி என்பதால் த.மா.கா. போட்டியிடக் கூடும் என பேசப்பட்டது, அப்படியிருக்க பழனிச்சாமி அணி போட்டியிட விரும்பியதால் அதனை த.மா.கா. ஏற்றுக்கொண்டது.
அதே நேரத்தில் பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது என தெரிவித்தார்.