யார் இந்த பழனிச்சாமி- எப்படியெல்லாம் இந்த பதவியை பிடி(பறி)த்தார்!எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய கேடயங்களை ஓரம் வைத்து விடக்கூடாது!

யார் இந்த பழனிச்சாமி- எப்படியெல்லாம் இந்த பதவியை பிடி(பறி)த்தார்!எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய கேடயங்களை ஓரம் வைத்து விடக்கூடாது!

 ம.பா.கெஜராஜ்,

 சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பழனிச்சாமி, அரசியலில் இன்று எடப்பாடி பழனிச்சாமியாக மாறி பெரிய பாலிடிக்ஸ் மன்னனாகவும் முடி சூட்டிக் கொண்டிருக்கிறார்.

  இந்த அளவுக்கு அவர் உயர்வதற்கு முதல் அடித்தளமே கிளைச் செயலாளர் பதவிதான். அது முதற்கொண்ட என்னவெல்லாம் பதவிகளை பெற்றார் என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம் வாங்க.

  கடந்த 1954-ம் ஆண்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தை சார்ந்த கருப்ப கவுண்டர்-தவசாயி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். இளைய மகன் பழனிசாமி பள்ளிக்கூடப் படிப்பை முடித்த பிறகு, ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல் இளமறிவியல் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிப்பு முடித்த பிறகு, வெல்ல கமிஷன் வியாபாரத்தில் ஈடுபட்டார் பழனிசாமி.

  ஆனால், அரசியல் ஆர்வம் அவரை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. எம்.ஜி.ஆரின் மீதுள்ள பற்றால், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

  ஆரம்பகாலத்தில் அவர் வசிக்கும் கிராமத்தின் அ.தி.மு.க கிளைக்கழக செயலாளர் முதல், மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகளுக்கு படிப்படியாக உயர்ந்தார்.

   அரசியல் வாழ்க்கைக்கு தொடக்கமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த அவருக்கு கோணேரிபட்டி கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1983-ல் ஒன்றிய இணை செயலாளராகவும், அ.தி.மு.க.வில் பதவி வகித்தார். அவரது தீவிரமான கட்சிப்பணியால் எம்.ஜி.ஆரின் மறைவுக்குபின் 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில், ஜெயலலிதா அணி வேட்பாளராக சேவல் சின்னத்தில், எடப்பாடி சட்டமன்றத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதில் வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தார்.

 அதன் பின்னர் மீண்டும் ஜெயலலிதாவால் சீட் கொடுக்கப்பட்டு 1991-ல் வெற்றி பெற்றார். ஆனால் 1996-ல் தோல்வி, 1999-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி, 2006-ல் தோல்வி என பல தோல்விகளையும்  சந்தித்தார்.

 இருப்பினும் ஆர்பத்துடன் கட்சிப்பணியில் ஈடுபட்டார். அவருக்கு 2011-ல் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியது. அதில் வெற்றிபெற்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆனார். 2016- ல் மீண்டும் வெற்றி கிடைக்க மறுபடியும் அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்தது. எடப்பாடி சட்டசபைத் தொகுதியிலிருந்து அவர் 1989, 1991, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

   நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவருக்கு வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவிலும் இடம்பெற்றார் எடப்பாடி பழனிசாமி. 2016-ல் மீண்டும் வெற்றிபெற்று அமைச்சர் ஆனார். தொடர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துவந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

  தொடக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி கே. பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டார்.

   ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா மீதான அதிருப்தியால் தனியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொண்டதோடு, டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்ய வைத்தார். பிறகு நடந்த இடைத்தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான அளவு சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறவும் செய்தவர், தேர்தல் நெருங்கியபோது அ.தி.மு.கவின் அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் தன்னை அறிவிக்கச் செய்தார்.

  2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயம், மக்கள் சேவை என பன்முகத்தன்மை கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து 48 ஆண்டுகளை கடந்துவிட்டன.

   குடும்பத்துடன் அழகான கிராம சூழலில் தொடக்கத்தில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் பணிகளுக்கு ஏதுவாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

   முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது குடிமராமத்து திட்டம், எளிமையான அணுகுமுறை பலவாறு கட்சியினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு கட்சியை தயார்படுத்துவது போன்ற சவாலான பணிகளை முன்னெடுத்து செயல்படும் கூடுதல் பொறுப்பும், கடமையும் உருவாகி இருக்கிறது.

  எந்த கடமையாக இருந்தாலும், இவரை தூக்கிசாப்பிடும் அளவுக்கு அரசியல்வாதியான ஓ.பி.எஸ். ஒருபக்கம், அதே போல் அவரை முதலமைச்சராக்கிய சசிகலா ஒருபக்கம் இவர்களால் ஏற்படக்கூடிய சட்ட போராட்டம் மறுபுறம் என இனி பழனிச்சாமி சவால்களை கையாள வாளை சரியாக வீச வேண்டும், அதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய கேடயங்களை அவர் ஓரம் வைத்து விடக்கூடாது அல்லவா?