நிழல் கவுன்சிலர்களுக்கு செக்! பெண் கவுன்சிலர்களுக்கு சிறப்பு பயிற்சி!!

ஆர்.ராஜேஷ்குமார்,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டத்தை வழிநடத்துவது குறித்து, மேயருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம். அதுமட்டுமின்றி பெண் கவுன்சிலர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது முதல்வர் உத்தரவுப்படி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் என்ன ஏது என விசாரித்தோம்.
சென்னை மாநகராட்சியில் மொத்ம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 102ல் பெண்கள் கவுன்சிலர்களாக தேர்வாகியிருக்கிறார்கள்.
அவர்களில் 82 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்கிற நிலையில் கவுன்சிலரான பிரியா, சென்னை மாநகராட்சி மேயராக தேர்வாகி நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ப்ரியாவைப்போலவே 15 மண்டலங்களில், திரு.வி.க., நகர் மண்டலக்குழு தலைவராக சரிதா நியமிக்கப்பட்டார். மேலும், ஆறு நிலைக்குழுக்களில் சுகாதாரத்துக்கு சாந்தகுமாரி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுவுக்கு பெண் கவுன்சிலர்கள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மேற்படி பெண் கவுன்சிலர்கள் பணிகள், அதிகாரங்களில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களான கணவர், தந்தை, மகன் உள்ளிட்டோர் தலையிட்டு பிரச்சனையாகி வருகின்றனர்.
கவுன்சிலருக்கான வார்டு அலுவலக இருக்கையிலும் குடும்ப ஆண்களே அமர்ந்து அட்ராசிட்டி செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட அவர்கள் நிழல் கவுன்சிலர்களாக செயல்படுவதாக அப்பட்டமாக தெரிகிறது.
சென்னை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவருக்கும், ஒரு வாரத்துக்கு முன்னர் வரிசைப்படி மொபைல் எண்கள் அளிக்கப்பட்டது. அவற்றை பல கவுன்சிலர்கள் பயன்படுத்த துவங்கவில்லை. அப்படியே பயன்பாட்டில் உள்ள எண்களை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசிய போது, பெண் கவுன்சிலர்கள் எண்களில் பெரும்பாலும் குடும்ப ஆண்களே எடுத்து பேசினர்.
இந்த சங்கதிகள் பல உளவுத்துறை வாயிலாகவும், மாநகராட்சி அதிகாரிகள் வாயிலாகவும், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம், கூட்டத்தை வழி நடத்துதல் போன்றவை குறித்து, மேற்படி பெண் கவுன்சிலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாம்.