எம் .ஜி. ஆர் சிலையின் கை உடைப்பு பதற்றம்!

கு.அசோக்,
வாலாஜாப்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே தங்க முலாம் பூசிய எம்ஜிஆர் சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கழகத்தின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் தங்க முலாம் பூசப்பட்ட வெங்கல சிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக கட்சி நிர்வாகிகளால் நிறுவப்பட்டது.
ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள், நினைவுநாள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வின் போது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ, சிலையின் இரும்பு பூட்டை உடைத்து எம்ஜிஆரின் இடது கை, மற்றும் அவருடைய கால், பகுதி பெயர் பலகை, ஆகியவை முழுவதும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள் உடைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதன் பேரில் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சிலையை உடைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே வாலாஜாப்பேட்டை நகரின் மையப்பகுதியாக இருக்கும் பேருந்து நிலையம், காவல் நிலையம் என நகரின் முக்கியமான இடத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக காணப்பட்டு வரும் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் யாரோ உடைத்திருக்கும் சம்பவம் அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.