சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க.அலுவலகம்! வன்முறை 144 தடை உத்தரவு அமுல்!!

சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க.அலுவலகம்! வன்முறை 144 தடை உத்தரவு அமுல்!!

ம.பா.கெஜராஜ்,

பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன்பாக ராயப்பேட்டையில் உள்ள எம் .ஜி. ஆர் மாளிகையில் ஓ.பி.எஸ். அண்ட் கோ அவர்கள் பலத்தை காட்டினர்.

 அப்போது அங்கு பெரும் மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இருவரும் ஒருவரை ஒருவர் கற்களையும் கம்புகளையும் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை போர்க்களமாக காட்சியளித்தது.

  அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டோரைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்தப் பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

 அப்போது அதிமு தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள் சூழ தமது கேரவன் வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அதேவேளை, அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தனர்.

   அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களைத் தாக்க ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முற்பட்டனர். ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால் அவர்களால் முன்னேறி கதவு உடைக்கப்பட்ட பகுதிக்கு வர முடியவில்லை. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனமும் கட்சி தலைமை அலுவலக பகுதிக்கு வந்தது. அங்கிருந்து தொண்டர்கள் சூழ ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீஸாரும் வந்தனர்.

 அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமி புகைப்படம் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டு,  ஓ.பி.எஸ். புகைப்படம் தலைமை அலுவலகத்தின் மேற்பகுதியில் மாட்டினர்.

 அங்கிருந்த கணினி, ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் உடைக்கப்பட்டிருந்தன. கட்டுக் கட்டாக கோப்புகள் வண்டி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டது.ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களின் மோதலைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அங்கு வந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். அந்த பகுதிக்கு 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

   இதற்கெல்லாம் திமுக தான் காரணம் என்று சொல்லப்பட்ட வேளையில் அ.தி.மு.க. கலாட்டாவில் திமுகவுக்கு எந்த வேலையும் இல்லை என்று திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான ஆர். எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.