கஞ்சி காய்சி 7 மணிநேரம் போராட்டம்! சாலை பிரச்சனைதான்!

இம்மி,
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் மலை சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறவில்லை என கூறி மலை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் 7 மணி நேரத்திற்கு பின்பாக போராட்டத்தை கைவிட்ட கலைந்து சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் -ஜமுனாமத்தூர் வனச்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
ஆகவே சாலையை விரிவாக்ககோரி வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அப்படியிருக்க மலைகிராம மக்கள் ஆர்.எம்.எஸ் புதூர் பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியின் முன்பு கஞ்சி காய்ச்சி சுமார் 7 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலில் மாணவிகளும் கலந்துக் கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்,வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளது 15 நாட்களுக்குள் சாலை விரிவாக்கம் பணி தொடங்கும் இனி விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என உறுதி அளித்தார்.
அதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மலை கிராம மக்கள் கலைந்து சென்றனர்
இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஆலங்காயம் பகுதியில் இருந்து காவலூர் வழியாக ஜமுனாமத்தூர் வரை செல்லும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.